தகவல் அறியும் சட்ட மூலம் 21 ஆம் திகதி நிறைவேற்றப்படும்; அமைச்சர் கயந்த
தகவல் அறியும் சட்டமூலம் எதிர்வரும் 21 ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, நிறைவேற்றப்படும் என அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில்அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்;
“தகவல் அறியும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 21 ஆம் திகதி விவாதிக்கப்படவுள்ளது. அந்தவகையில் அன்றைய தினம் விவாதம் நடத்தப்பட்டு சட்டமூலத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இது நீண்டநாள் செயற்பாடாக இருந்தது. அதன்படி எதிர்வரும் 21 ஆம் திகதி இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படும்.
எமது அரசாங்கம் ஜனநாயக ரீதியில் பயணிக்கின்றது. தற்போது நிதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் கடந்த காலத்தில் நிதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர முடியவில்லை. காரணம் கடந்த காலத்தில் ஜனாதிபதியே நிதியமைச்சராக இருந்தார். எனவே, நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரமுடியவில்லை” என்றார்.