பாதுகாப்பான பகுதியாக இப்போதைக்கு உறுதிப்படுத்த முடியாது; ராணுவ பேச்சாளர்
கொஸ்கம ராணுவ முகாமின் அண்மித்த பிரதேசத்தை பாதுகாப்பான பகுதி என தற்போதைக்கு உறுதிப்படுத்தி கூற முடியாது என்று ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
கொஸ்கம ராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக ஏற்பட்ட தீ முழுமையாக அணைக்கப்பட்ட போதும், ஆயுத களஞ்சியத்திலிருந்து தொடர்ந்து வெடிப்பு சத்தங்கள் கேட்டுக்கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
ராணுவ முகாமை சுற்றி காணப்படும் பிரதேசத்தில் விழுந்து கிடக்கின்ற ஆயுதங்களையும் ஆயுதங்களின் பாகங்களையும் அகற்றி துப்பரவு செய்வதற்கு 96 மணிநேரம் ராணுவத்தினரால் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அந்தவகையில் 96 மணி நேரத்தின் பின்னரே ராணுவ முகாமை சுற்றியுள்ள பிரதேசங்களை பாதுகாப்பான பிரதேசமாக அறிவிக்க முடியும் என்றார்.
“வீடுகளுக்குள்ளும் வெளியிலும் ஆயுத களஞ்சியத்திலிருந்து சிதறிய ஆயுதங்களின் துண்டுகளும் பாகங்களும் வந்து விழுந்துள்ளன. சில ஆயுதங்கள் முழுமையாக விழுந்து காணப்படுகின்றன.
எனவே 96 மணித்தியாலத்திற்கு பின்னரே குறித்த பிரதேசத்தில் பாதுகாப்பு தொடர்பான விடயங்களை உறுதிப்படுத்தி கூறமுடியும்” எனவும் அவர் தெரிவித்தார்.