ஒரு வாரம் வெளிநாடு செல்ல, ஜோன்ஸ்டனுக்கு நீதிமன்றம் அனுமதி
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ, வெளிநாடு செல்வதற்கு கொழும்பு பிரதம நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய இன்று திங்கட்கிழமை அனுமதி வழங்கினார்.
இதற்கிணங்க, நீதிமன்றத்தில் முடக்கி வைக்கப்பட்டிருந்த ஜோன்ஸ்டன் பெனாண்டோவின் கடவுச் சீட்டு விடுவிக்கப்பட்டது.
ஜோன்ஸ்டன் பெனாண்டோ தனது மனைவியை சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் செல்லவுள்ளதாகவும், இதற்காக தனக்கு அனுமதி வழங்குமாறும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தக் கோரிக்கைக்கிணங்க, ஒரு வாரம் மட்டும் வெளிநாட்டில் தங்கியிருக்கும் நிபந்தனையுடன் அவரின் கடவுச் சீட்டு விடுவிக்கப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரை, தனது சொத்து விபரங்களை ஜோன்ஸ்டன் பெனாண்டோ வெளியிடவில்லை எனத் தெரிவித்து, லஞ்ச ஊழல் ஆணைக்குழு, அவருக்கு எதிராக 05 வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்குகளில் போது, ஜொன்ஸ்டன் பெனாண்டோ வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதோடு, அவரின் கடவுச் சீட்டும் நீதிமன்றத்தினால் கைப்பற்றப்பட்டிருந்தது.
இந்த நிலையில், எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை, வெளிநாடு செல்லும் பொருட்டு, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவின் கடவுச் சீட்டு, நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளது.