கட்சி பிளவுபடும்: மு.கா. தவிசாளர் பஷீர் சேகுதாவூத் எச்சரிக்கை
முஸ்லிம் காங்கிரஸின் உள்ளக முரண்பாடுகள் உடனடியாக பேசி தீர்க்கப்பட வேண்டும் என்றும் செயலாளர் ஹசன் அலியிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்கள் மீள வழங்கப்பட வேண்டும் என்றும் அந்தக் கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் வலியுறுத்தியுள்ளார்.
இல்லையேல் எதிர்வரும் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் பாரிய சரிவினையும் பிளவினையும் எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மு.கா.வின் உள்ளக முரண்பாடுகள் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
“கட்சியின் உள்ளக முரண்பாடுகள் தீர்க்கப்பட்டு செயலாளர் ஹசன் அலியிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்கள் மீள வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கட்சி பல சவால்களை எதிர்நோக்க வேண்டியேற்படும்
தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் சிக்கல் நிலை தோன்றுவதுடன் கட்சியின் வாக்கு வங்கியிலும் சரிவு ஏற்படும்.
கட்சியில் எனக்கு எதுவித பிரச்சினையும் இல்லை. நான் கட்சியை நேசிப்பவன். கட்சியின் செயலாளருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும், கட்சியின் கொள்கைகளுக்கு மாறான தீர்மானங்களுக்கும் எதிராகவே நான் குரல் கொடுக்கிறேன்.
நான் நீதிக்காகவே போராடுகிறேன். இவ்வாறான நடவடிக்கைகளால் கட்சி பிளவுபடக் கூடாது என்பதற்காகவே எழுந்து நிற்கிறேன்.
கட்சி எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்காக கட்சியை தூய்மைப்படுத்த வேண்டியுள்ளது. கட்சியின் உள்ளக முரண்பாடுகளை தீர்த்து வைப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள மூவர் அடங்கிய குழு, ஹசன் அலியுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடாத்தியுள்ளது” என்றார்.