மஹிந்தவின் பாதுகாப்பில் பாரிய பிரச்சினை; முன்னாள் அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாரியளவிலான பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக, முன்னாள் அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இந்த விடயத்தைக் கூறினார்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்;
“மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த குண்டு துளைக்காத வாகனம் விபத்தில் சிக்சி பல மாதங்களாகியும், இன்னும் அது – பழுது பார்த்து வழங்கப்படவில்லை.
அரசாங்கம் பொறுப்பேற்று 14 மாதங்கள் ஆகிவிட்டபோதும், மஹிந்த ராஜபக்ஷவுக்கான உத்தியோகபூர்வ இல்லம் இன்னும் வழங்கப்படவில்லை.
ஒரு காலத்தில், அப்போதைய அரசாங்கத்துக்கு சவாலாக இருந்ததோடு, மக்கள் செல்வாக்கினைப் பெற்றுவந்த லலித் அத்துலத் முதலி மற்றும் காமினி திஸாநாயக்க ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.
மஹிந்த ராஜபக்ஷ தொடரபிலும், இதுபோன்ற அச்சம் எமக்கு உள்ளது.
எனவே, மஹிந்தவுக்கு சிறிய பாதிப்பு ஏற்பட்டால் கூட, இந்த அரசுதான் பொறுப்புக்கூற வேண்டும்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பாதாள உலகக் குழுவினரும் தனியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்” என்றார்.