ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில், படகு மீது நாசகார வேலை; உரிமையாளருக்கு 03 லட்சம் ரூபாய் நஷ்டம்
🕔 March 11, 2016
– சக்கீப் அகமட் –
ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் ஒருவருக்குச் சொந்தமான மூன்று மீன்பிடி படகினுள் அசிட் ஊற்றப்பட்டு, அதனுள் இருந்த பெறுமதியான மீன்பிடி வலைகள் சேதமாக்கப்பட்டுள்ளன.
இச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
அட்டாளைச்சேனை 08 ஆம் பிரிவைச் சேர்ந்த சேர்ந்த செயினுலாப்தீன் அஹத் என்பவருக்குச் சொந்தமான மீன்பிடி படகளினுள் இவ்வாறு அசிட் ஊற்றப்பட்டுள்ளது.
தொழிலுக்காக கடலுக்குச் செல்லும் பொருட்டு, ஒலுவில் துறைமுகத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளை தயாராக்கச் சென்றபோதே, தனது படகினுள் அசிட் ஊற்றப்பட்டிருந்தமையை உரிமையாளர் கண்டுள்ளார்.
இதனால், படகு உரிமையாளருக்கு சுமார் 03 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.
மேற்படி நாசகார வேலையை மேற்கொண்டவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
இதற்கு முன்னரும், துறைமுகத்தினுள் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகளிலிருந்து பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பில் துறைமுக அதிகாரிகளிடத்தில் முறையிட்டும், எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என மீனவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.