கிறிக்கட் மைதானத்தில், திருமண நிகழ்வுகள்: விளையாட்டுத்துறை அமைச்சர் தகவல்
ஹம்பாந்தோட்ட சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிறிக்கட் அரங்கு, திருமண நிகழ்வுகளை நடத்தும் வகையில் வாடகைக்கு விடப்படுவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர நேற்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே எழுப்பிய வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் கூறினார்.
சுமார் 4.2 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த மைதானத்தில் சர்வதேச கிரிக்கட் போட்டிகள் நடைபெறாத காரணத்தினால், இதன் பிரதான நுழைவரங்கு திருமண விருந்துபசார மண்டபமாக வாடகைக்கு விடப்படுகிறது.
இங்கு நடத்தப்படும் திருமண நிகழ்வுகளுக்காக நாளொன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் வாடகையாக அறவிடப்படுகிறது.
இந்த விளையாட்டு அரங்கம் மூடப்பட மாட்டாது. விளையாட்டு மைதானத்தை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
சர்வதேச பயிற்சிகளை நடாத்தக் கூடிய ஓர் மைதானமாக இந்த மைதானத்தை மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
சூரியவெவ பிரதேசத்தில் விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கு உசிதமான ஹோட்டல்கள் கிடையாது எனவும் அவ்வாறான ஹோட்டல்கள் நிர்மானிக்கப்பட வேண்டுமென பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார் எனவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.