சிறைச்சாலையில் ஞானசார உபதேசம்
வெலிக்கடை சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட ஞானசார தேரர், அவ்வப்போது சிறைச்சாலை அதிகாரிகளுக்கு தர்ம உபதேசம் செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.
ஞானசார தேரரை வேறு கைதிகள் இல்லாத, எவரும் இலகுவில் நுழைந்து விட முடியாத பிரத்தியேக இடத்திலேயே வைத்துள்ளதாகவும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நிலைமைகளை கருத்தில் கொண்டே இவ்வாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஸான் தனசிங்ஹ தெரிவித்துள்ளார்.
சிறைச் சாலை உள்ளக தகவல்களின் அடிப்படையில் கலகொட அத்தே ஞானசர தேரர் வெலிக்கடை சிறை வளாகத்தில் உள்ள, கொழும்பு விளக்கமறியல் சிறை ‘எச்’ பிரிவில் உள்ளார் என்றும், தேரரின் பாவனைக்காக நிலத்தில் மெத்தை ஒன்று போடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று புதன்கிழமை சிறைச்சாலையில் வழங்கப்பட்ட காலை உணவினை ஞானசார தேரர் ஏற்றுக் கொண்டதாகவும், பகல் அவரைப் பார்க்க வந்த பிரமுகர்கள் வழங்கிய உணவினை அவர் பெற்றுக்கொண்டார் என்றும் சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்தன.
இந் நிலையில் ஞானசார தேரர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திலும் பாதுகாப்பு நேற்று அதிகரிக்கப்பட்டிருந்தது. வெலிக்கடை சிறை வளாகத்துக்குள் நுழையும் அத்தனை வாகனங்களும் தீவிர சோதனைக்கு நேற்று உட்படுத்தப்பட்டன.