இந்திய விண்கலம் ‘சந்திராயன் 3’ ஏவப்பட்டது
🕔 July 14, 2023
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் விண்கலம் ‘சந்திரயான் 3’ இன்று (14) விண்ணில் ஏவப்பட்டது.
இன்று மதியம் 2:35 மணிக்கு ‘சந்திரயான் 3’ விண்கலத்தைச் சுமந்து செல்லும் எல்விஎம்3 எம்4 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
இஸ்ரோவின் எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் விண்வெளிப் பரிசோதனைகளில் மிகவும் சிக்கலான சோதனைகள் என்று சந்திரயான் திட்டங்களைச் சொல்லலாம்.
சந்திரயான்-3, இரண்டு முக்கிய கூறுகளைக் கொண்டுள்ளது. நிலவின் சுற்றுப்பாதையில் லேண்டர் மற்றும் ரோவர் வைக்கப்பட்டிருக்கும் அலகை எடுத்துச் செல்வது ஒரு கூறு. பின்னர் நிலவின் மேற்பரப்பில் லேண்டர் மற்றும் ரோவர் தொகுதியை பாதுகாப்பாக தரையிறக்கப் பயன்படும் ஒருங்கிணைந்த தொகுதி மற்றொரு கூறு.
லேண்டர் தொகுதி, அதிலிருந்து பிரிந்து நிலவின் மேற்பரப்பில் இறங்கும். அது பாதுகாப்பாக இறங்கிய பின், ரோவர் வெளியேறுவதற்கான சாய்வான அமைப்பு மெதுவாக வெளியேறும். அதன் பின் ரோவர் (உலவி) வெளியே வரும்.
இந்த ரோவர் நிலவின் நிலப்பரப்பில் சுற்றி, அதை பகுப்பாய்வு செய்யும். இதில் கிடைக்கும் தகவல்கள் ரோவரிலிருந்து லேண்டருக்கு அனுப்பிவைக்கப்படும். இந்தத் தரவுகள் நிலவிலிருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றிக்கொண்டிருக்கும் சந்திரயான் -2 ஆர்பிட்டருக்கு அனுப்பப்படும்.
அங்கிருந்து தரையிலுள்ள இஸ்ரோவுக்கு இந்தத் தரவுகள் வந்தடையும்.