வென்றது உரிமைப் போராட்டம்: ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு ஹபாயாவுடன் சென்றார் ஆசிரியை பஹ்மிதா

🕔 May 26, 2023

பாயாவோடு கடமைக்குச் சென்றமைக்காக தடுக்கப்பட்ட திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரி ஆசிரியை பஹ்மிதா ரமீஸ், அந்தப் பாடசாலைக்கு ஹபாயாவோடு சென்று தனது ஆவணங்களை அதிபரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

கடந்த செவ்வாய்கிழமை (23) இச்சம்பவம் இடம்பெற்றது.

ஆசிரியை பஹ்மிதா ரமீஸ் தரப்புக்கும் – ஷண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜன் தரப்பிற்குமிடையில் கடந்த திங்கட்கிழமை (22) இணக்கப்பாட்டு ஏற்பட்டதை அடுத்து வழக்குகள் முடிவுறுத்தப்பட்ட நிலையில், உடன்பட்ட நிபந்தனைகளில் ஒன்றான ஆசிரியை பஹ்மிதா றமீஸின் இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தர உயர்வு, சம்பள உயர்வுக்கான ஆவணங்களை உடனே கையெழுத்திடுவதாக அதிபர் தரப்பு ஏற்றிருந்தது.

வழக்கின் நிபந்தனைகளில் ஒன்றை நிறைவேற்றும் முகமாக கடந்த செவ்வாய்க்கிழமை (23) குரல்கள் இயக்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி ஹஸ்ஸான் றுஸ்தி மற்றும் தவிசாளர் சட்டமாணி றாஸி முஹம்மத் ஆகியோருடன் ஷண்முஹா இந்து மகளிர் கல்லூரிக்கு ஆசிரியை பஹ்மிதா றமீஸ் ஹபாயா ஆடை அணிந்து சென்று – தனது ஆவணங்களை அதிபரின் கையெழுத்துக்களுடன் பெற்றுகொண்டார்

ஆசிரியை பஹ்மிதா – ஹபாயா அணியும் உரிமை மறுக்கப்பட்ட நிலையில் எந்த பாடசாலைக் கதவுகளினூடாக வெளியேறினாரோ, அதே கதவினூடாக ஹபாயா அணிந்த வண்ணம் நுழைந்து, எந்த அதிபர் அலுவலகத்தில் இருந்து கடமையேற்க விடாமல் அனுப்பப்பட்டாரோ, அதே அலுவலகத்தில் அதிபர் லிங்கேஸ்வரி முன்னால் ஹபாயாவோடு கதிரையில் அமர்ந்து கௌரவமாக தனது ஆவணங்களைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்