நெல் விவசாயிகளுக்கு தமிழ் – சிங்கள புதுவருடத்துக்கு முன்னர் நிதி நிவாரணம்: விவசாய அமைச்சர் தெரிவிப்பு

🕔 March 30, 2023

நெல் பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் நிதி நிவாரணம் வழங்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இதனைக் கூறினார்.

“பெரும்போக பருவத்தில், மேலதிகமாக 30,000 மெற்றிக் தொன் நெல் அறுவடை கிடைத்துள்ளது. எனவே விவசாயிகளுக்கு நிவாரண விலையில் தேவையான அனைத்து உரங்களையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் உரங்களின் விலையை குறைப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டுள்ளது. தற்போது 50 கிலோகிராம் யூரியா உர மூட்டை 10,000 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

மேலும், உரங்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் அல்லது கூப்பன்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்போம். இவ் வருடம், முதல் இரண்டு பிரதான பருவங்களுக்கு மேலதிகமாக இடைப்பட்ட பருவத்தில் விவசாயிகள் பயிரிட தயாராக உள்ளனர்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், இம்முறை நெல் கொள்வனவு – மாவட்ட அரசாங்க அதிபர்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் என சுட்டிக்காட்டிய அமைச்சர், மேலதிக பண ஒதுக்கீடுகள் தேவைப்படின் பணத்தை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதி வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

“நெற்செய்கைக்கு மேலதிகமாக ஏனைய பயிர்ச்செய்கைகளுக்கும், உரம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் நிவாரண விலையில் உரங்களை வழங்க முடியும். இதனால் தனியாரின் வர்த்தக ஏகபோகத்தை உடைக்க முடியும்” என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்