தேர்தலை நடத்துவதென்பது முடியாத காரியம்: நிதியமைச்சின் பேச்சாளர்

🕔 December 29, 2022

தேர்தலை நடத்துவது என்பது முடியாத காரியம் என நிதியமைச்சின் பேச்சாளர் தெரிவிதுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அரசாங்க நிதி போதுமானது என தெரிவித்துள்ள அவர், தற்போதை நிதியில் தேர்தலை நடத்துவது முடியாத காரியம் என, அவர் நேற்று கூறியுள்ளார்.

“நாட்டின் பொருளாதாரத்தை படிப்படியாக மீட்டெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகளின் முடிவுகள் மார்ச் 2023 இல் மட்டுமே வெளிப்படும். இந்த நேரத்தில் தேர்தலுக்கு நிதி ஒதுக்கப்பட்டால் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அரச ஊழியர்களின் சம்பளத்துக்காக 93,000 மில்லியன் ரூபாவும், ஓய்வூதியத்துக்காக 26,500 மில்லியன் ரூபாவும், சமுர்த்தி கொடுப்பனவுகளுக்காக 6,000 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆயுதப்படைகளின் நலனுக்காக 2000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட வேண்டும். மற்ற சமூக பாதுகாப்பு நோக்கங்களுக்காக மேலும் ரூ.3,500 மில்லியன் தேவை” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

“மார்ச் 2023க்குள் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைத்தால் மட்டுமே பொருளாதாரம் நிலைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகி வருவதாக கூறப்படும் நிலையில், நிதியமைச்சின் பேச்சாளர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்