உலகளவில் ஜனவரி முதல் மே வரை 22 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்
உலகளாவிய ரீதியில் இவ் வருடம் ஜனவரி முதல் மே வரையிலான காலப் பகுதியில், 22 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக, ‘ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பு’ தகவல் வெளியிட்டுள்ளது.
இவ் வருடம் ஜனவரி மாதம் 02 ஆம் திகதி முதல் மே மாதம் 12 ஆம் திகதி வரை, மேற்படி 22 ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
‘சான்செஸ்’ என அழைக்கப்படும் மெக்சிகோவைச் சேர்ந்த – ஜோஸ் மொய்செஸ் சான்செஸ் கிறஸோ (Jose Moises Sanchez Cerezo) என்பவரே, இவ்வருடத்தில் பலியான முதலாவது ஊடகவியலாளராவார்.
‘லா யூனியன்’ (La Union) எனும் வாரப் பத்திரிகையின் ஸ்தாபகரும் ஊடவியலாளருமான சான்செஸ், அவரின் வீட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு, கொலை செய்யப்பட்டிருந்தார்.
இதேவேளை, பிரான்ஸ் நாட்டிலேயே இவ்வருடம் அதிகமான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு – இவ்வருடம் 08 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஜனவரி 07 ஆம் திகதி – பத்திரிகை நிறுவனமொன்றின் மீது, ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலொன்றில் மேற்படி 08 ஊகவியலாளர்களும் பலியாகினர்.
இறுதியாக, மே 12 ஆம் திகதி, பங்களாதேஷைச் சேர்ந்த ஆனந்த பிஜோய்தாஸ் எனும் ஊடகவியலாளர் படுகொலை செய்யப்பட்டார்.
பரப்பரப்பான வீதியொன்றில் வைத்து, அடையாளம் தெரியாத நான்கு நபர்களால், ஆனந்த பிஜோய்தாஸ் கொல்லப்பட்டார்.