பத்திரிகைக்காரங்களா நீங்க? த்தூ…
தென்னிந்திய நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த், இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, மிகவும் அநாகரீகமாக ஊடகவியலாளர்களைப் பேசியமையானது, பல்வேறு விமனர்சனங்களையும், எதிர்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.
விஜயகாந்தின் கட்சியான தே.மு.தி.க. சார்பில் இன்று சனிக்கிழமை ரத்ததான முகாமொன்று இடம்பெற்றது. இந்த முகாமைத் தொடக்கி வைத்த விஜயகாந்த், பின்னர் ஊடகவியலாளர்களையும் சந்தித்தார்.
அப்போது விஜயகாந்திடம், 2016ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்குமா? பிடிக்காதா? என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த விஜயகாந்த், ”ஆட்சியை பிடிக்கவே பிடிக்காது போதுமா. 2016-ல் ஜெயலலிதாவின் அ.தி.மு.க. ஆட்சியைப் பிடிக்குமா என்கிற இந்த கேள்வியை நீங்க ஜெயலலிதாவிடம் போய் கேட்க முடியுமா? கேக்கவே மாட்டீங்களே, பயப்புடுவீங்க…. பத்திரிகைகாரங்களா நீங்க? த்தூ…” என்று துப்பினார்.
ஊடகவியலாளர்களை அவமதிக்கும் விதமாக, விஜயகாந்த் பேசியதோடு, ‘த்தூ..’ என்று துப்பி, அவர் மிகவும் அநாகரிகமாக நடந்துக் கொண்டமையானது பல்வேறு மட்டங்களிலும் எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.