ஹபாயாவுடன் சென்ற ஆசிரியை மீது தாக்குதல்; வைத்தியசாலையில் அனுமதி: திருகோணமலை ஷண்முகாவில் முடிவுக்கு வராத கலாசாரப் பயங்கரவாதம்

🕔 February 2, 2022

– எ.எல். ஆஸாத் (சட்டத்தரணி) –

திருகோணமலை ஷண்முஹா இந்து மகளிர் கல்லூரிக்கு ஹபாயா அணிந்து கொண்டு சென்ற பாத்திமா பஹ்மிதா எனும் ஆசிரியை, இன்று பாடசாலைக்குள் கூடியிருந்த வெளியாட்கள் சிலரால் மிரட்டப்பட்டதாகவும், இதன்போது நபரொருவரால் கழுத்து நெரிக்கப்பட்ட ஆசிரியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்டளதாகவும் தெரியவருகிறது.

ஹபாயா அணிந்து சென்றமை காரணமாக ஒரு தடவை பாடசாலையிலிருந்து குறித்த ஆசிரியை வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து, நீதிமன்றத்தில் இருதரப்பிற்குமிடையில் ஏற்பட்ட புரிந்துணர்வின் காரணமாக இன்று (02) மீண்டும் பாடசாலைக்கு கடமை ஏற்க சென்ற போதே இந்த சம்பவம் நடந்துள்ளது. 

2017ல் ஹபாயா அணிந்து கற்பிக்கச் சென்ற ஆசிரியைகளை ஹபாயா அணிந்து வந்ததன் காரணமாக பாடசாலையை விட்டு ஷண்முஹா கல்லூரி நிர்வாகம் வெளியேற்றியது. மனித உரிமை ஆணைக்குழுவில் ஆசிரியைகள் செய்த முறைப்பாட்டை விசாரித்த ஆணைக்குழு, ஆசிரியைகளின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக முடிவு செய்ததோடு ஆசிரியைகளை மீள ஷண்முஹாவிற்கு உடனடியாக அனுமதிக்குமாறு பிரேரித்தது.

இந்த நிலையில் பல வருடங்களாகியும் மனித உரிமை ஆணைக்குழுவின் பரிந்துரை நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், அதனை நடைமுறைப்படுத்தக் கோரி பாதிக்கப்பட்ட ஆசிரியைகளில் ஒருவரான ஆசிரியை பஹ்மிதா ரமீஸ், மேல் முறையீட்டு நீதி மன்றத்தில் ரிட் (Writ) மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.

சென்ற மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரச தரப்பு இணக்கப்பாட்டுக்கு வருவதாகக் கூறியதைத் தொடர்ந்து, அதனை ஏற்றுக் கொண்ட மனுதாரரான ஆசிரியை பஹ்மிதா, தான் மீண்டும் ஷண்முஹாவுக்கு அனுமதிக்கப்படவேண்டும் என்று கேட்டிருந்தார். அதனை ஏற்றுக் கொண்ட அரச தரப்பு, இன்று (02.02.2022) ஆசிரியை பஹ்மிதாவை மீண்டும் ஷண்முஹாவுக்குச் சென்று கடமையை ஏற்குமாறு அனுமதித்தது.

அதற்கான கடிதத்தினை கல்வி அமைச்சு அனுப்பியிருந்தது.

அதன் பிரகாரம் இன்று ஷண்முகா வித்தியாலயத்துக்கு கடமையேற்கச் சென்ற ஆசிரியை பாத்திமா பஹ்மிதாவை, அதிபரின் காரியாயலயத்தில் கூடியிருந்த பலர் தடுத்ததோடு தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதன்போது கூட்டத்தினுள் இருந்த ஒருவர் ஆசிரியை பஹ்மிதாவின் கழுத்தை நெரிக்க முயற்சி செய்துள்ளதுடன் அவரின் கையடக்கத் தொலைபேசியையும் பறிக்க முயன்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து காயமடைந்த ஆசிரியை பஹ்மிதா திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதே நேரம் பாடசாலையின் அதிபர், தன்னை ஆசிரியை பஹ்மிதா தாக்கியதாகக் கூறி, அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்பான கட்டுரை: புடவைப் பயங்கரவாதம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்