மிச்சச் சோறு கேட்கும் எச்சிப்பொறுக்கி; ஆப்பிழுத்த குரங்கான விரிவுரையாளரின் கதை: புஷ்வானமானது புதிய ஓடியோ

🕔 January 22, 2022

– அஹமட் –

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஒருவர், முதலாமாண்டு மாணவியொருவருக்கு பாலியல் சேட்டை விட்டதையடுத்து, தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட மாணவிக்கு ‘நடத்தை கெட்டவள்’ என்கிற முத்திரையை குத்தும் நடவடிக்கைகளில், விரிவுரையாளரைக் காப்பாற்றுவதற்கு முயற்சிக்கும் கோஷ்டியினர் ஈடுபட்டு வருகின்றமையை அவ்வப்போது காண முடிகிறது.

அவற்றில் ஓர் அங்கமாக, தற்போது – அந்த மாணவியுடன் குறித்த விரிவுரையாளர் காமமுற்றுப் பேசும் ஒலிப்பதிவொன்றினை வெளியிட்டிருக்கும் விரிவுரையாளர் சார்பான கோஷ்டியினர், அந்த மாணவிக்கு இந்த விவகாரத்தில் விருப்பம் இல்லையென்றால், ஏன் விரிவுரையாளருடன் ‘நளினமாகப்’ பேச வேண்டும் எனவும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

அந்த ஒலிப்பதிவின் படி, குறித்த மாணவிக்கு அந்த விரிவுரையாளன் தொலைபேசி அழைப்பெடுக்கிறான். அப்போது அந்த மாணவி சாப்பிட்டுக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார். அதற்கு அந்த எச்சிப்பொறுக்கி விரிவுரையாளன்; “நீங்கள் சாப்பிட்டதில் மிச்சத்தை எனக்குத் தாங்கள்” என கெஞ்சுகிறான். அதுவும் விடுதியில் இருந்து வெளியே வந்து அதை தருமாறு கேட்கிறான்.

ஒரு விரிவுரையாளர் இப்படிக் கேட்கும் போது, அந்த மாணவி அதிர்ந்து தடுமாறுவதை அந்த ஒலிப்பதிவில் உணர முடிகிறது. கடைசி வரை அந்த எச்சிப் பொறுக்கி விரிவுரையாளன் – அந்த மாணவி சாப்பிட்ட மிச்சத்தை தருமாறு கேட்டு வற்புறுத்துகிறான். ஆனால், அந்த மாணவி அதற்கு எவ்வளவு நாசூக்காகவும் நாகரீகமாகவும் ‘முடியாது’ எனக் கூற முடியுமோ அப்படியெல்லாம் கூறி மறுக்கிறார்.

ஒருவரின் பிடிக்குள் அல்லது கட்டுப்பாட்டுக்குள் சிக்கிய நபரொருவருக்கு உளரீதியாக ஏற்படும் பயம், நடுக்கம், தடுமாற்றம் ஆகியவற்றினை அந்த மாணவியின் குரலில் தெளிவாக உணர முடிகிறது.

தனது விரிவுரையாளர் அதுவும் தன்னை பரீட்சையில் சித்தியடையாமல் (பெயில்) செய்து விடக் கூடிய அதிகாரம் கொண்டவர், தன்னிடம் பாலியல் சேட்டை விடும் போது, ஒரு மாணவி எதைச் செய்வாரோ, அதையே, அந்த மாணவியும் வெளிப்படுத்துகிறார்.

மேலும், அந்த விரிவுரையாளரை ‘வாய்க்கு வாய்’ – “சேர்… சேர்” என்று அந்த மாணவி சொல்கின்றமையும் இங்கு கவனிக்கத்தக்கது.

எச்சில் சாப்பாட்டை அவன் கேட்கிறான். ஆனால், அந்த மாணவி; “சாப்பிட்டு முடித்து விட்டேன்” என்கிறார். அவன் விடவில்லை. “ஹொஸ்டல் (விடுதி) வாயிலடியில் மிச்ச சாப்பாட்டை கொண்டு வந்து தா” என்கிறான். அதற்கு அந்த மாணவி; “சேர் எனக்கு கால் வலிக்கிறது நடந்து வர முடியாது” என்கிறார். அவன் வற்புறுத்துகிறான். “சேர் நான் ஹபாயாவுடன் இல்லை. அதனால் வர முடியாது” என்கிறார். அதற்கு “பரவாயில்லை சாதாரண ஆடையுடன் வா” என்கிறான்.

இப்படி அந்த உரையாடல் முழுக்க, அந்த எச்சிப்பொறுக்கியின் காம மீறலை, அந்த மாணவி மிகவும் அச்சத்துடனும் நாசூக்காகவும் தட்டிக்கழிக்கிறார். ஓர் இடத்தில் கூட, அந்த விரிவுரையாளரின் பேச்சுக்கு அந்த மாணவி இணக்கம் தெரிவிப்பது போல் தெரியவில்லை.

இப்படியிருக்க, இந்த ஒலிப்பதிவை வெளியிட்டு, குறித்த மாணவி, சம்பந்தப்பட்ட விரிவுரையாளருடன் நளினமாகப் பேசுவதாகவும், அந்த விரிவுரையாளருக்கு ஏதோ ‘இணக்கம்’ வெளியிட்டது போலவும் காட்ட சிலர் முயற்சிக்கின்றனர்.

இதேவேளை, பரீட்சை வினாப்பத்திரமொன்றை அந்த மாணவிக்கு குறித்த ‘எச்சக்கல்லை’ விரிவுரையாளர் கொடுத்திருக்கிறார் என்பதையும் அந்த ஒலிப்பதிவில் தெளிவாக விளங்க முடிகிறது. பாலியல் லஞ்சமொன்றை அந்த மாணவியிடம் கோரும் நோக்குடன்தான், அந்தப் பரீட்சை வினாப்பத்திரத்தை அவர் வழங்கியிருக்கின்றார். இது மிகவும் பாரதூரமான குற்றமாகும்.

கூட்டிக்கழித்துப் பார்க்கையில், குறித்த மாணவி மீது – சேறு பூசும் நோக்கத்துடன், அந்த எச்சிப்பொறுக்கி விரிவுரையாளனின் கோஷ்டியினர் வெளியிட்டுள்ள இந்த ஒலிப்பதிவு – குரங்கு ஆப்பிழுத்த கதையாகியுள்ளது.

தொடர்பான செய்தி: மாணவி முறைப்பாட்டை வாபஸ் வாங்கினாலும், விசாரணைகள் தொடரும்: விரிவுரையாளரின் பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்