“வாயில் வந்ததையெல்லாம் பேசும் காவி பயங்கரவாதி”: ஞானசார தேரரை சாடுகிறார் மனோ கணேசன்

🕔 December 24, 2021

வாயில் வருவதையெல்லாம் பேசும் ஞானசார தேரரின் நடத்தைகளை ஆட்சேபித்து, ஒரே நாடு – ஒரே சட்டம் செயலணியில் அங்கத்துவம் வகிக்கும் தமிழ், முஸ்லிம்கள் உடன் பதவி விலக வேண்டும் எனக் கோருவதாக தமிழ் முற்போற்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும், அமைச்சர்கள் அலி சப்றி மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர், அரசாங்கத்தினுள் இருப்பதால் – தமிழ் பேசும் மக்களின் குறைந்தபட்ச பிரச்சினைகளையாவது அரசாங்க தலைமையின் கவனத்துக்குக் கொண்டு வர முடிகிறது என்றும், ஆனால் இந்த குறைந்தபட்ச அவகாசத்தையும் கூட தட்டி பறிக்க ஞானசார தேரர் எனும் காவி பயங்கரவாதி முயற்சிக்கிறார் எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் இவற்றினை அவர் பதிவு செய்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

‘அமைச்சர் அலி சப்றியை பதவி விலக சொல்லும் ஞானசார தேரரை, ஒரே நாடு – ஒரே சட்டம் செயலணிக்கு, ஜனாதிபதிதான் நியமித்தார். அமைச்சர் அலி சப்றியையும், கேபினட் அமைச்சராக இந்த ஜனாதிபதிதான் நியமித்தார்.

இந்நிலையில், ஜனாதிபதியின் ஞானசாரர், ஜனாதிபதியின் அமைச்சரை பதவி விலக சொல்கிறார். இதென்ன கூத்து?எதிர்கட்சி அரசியல்வாதிகள் இப்படி சொன்னால் அதில் ஒர் அரசியல் தர்க்கமாவது இருக்கும். அப்படியும் நான் அதை சொல்ல மாட்டேன்.

அரசாங்கத்தை நாம் கடுமையாக எதிர்ப்பது என்பது வேறு. ஆனால் இந்த அரசாங்கத்துக்குள் சிறுபான்மை கபினட் அமைச்சர்கள் இருப்பது நல்லது. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இதுதான் இலங்கை அரசாங்கம்.

அமைச்சர்கள் அலி சப்றி, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் அங்கே இருப்பதால், தமிழ் பேசும் மக்களின் குறைந்தபட்ச பிரச்சினைகளையாவது அரசாங்க தலைமையின் கவனத்துக்குக் கொண்டு வர முடிகிறது. இந்த குறைந்தபட்ச அவகாசத்தையும் கூட தட்டிப் பறிக்க இந்த காவி பயங்கரவாதி ஆள் முயல்கிறார்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக இந்த ஆள் பேசுகிறார். நாளை கிறிஸ்மஸ் பிறக்கிறது. அதற்கும் இவர் எதையாவது திருவாய் மலருவார். முஸ்லிம்களுக்கு எதிராக பலமுறை பலதையும் பேசியுள்ளார்.

இந்துக்களை அரவணைப்பது போல் பம்மாத்து காட்டுகிறார். ஆனால், வட கிழக்கில், பெளத்த தொல்பொருள் சின்னங்கள் என்று கூறி, இந்து ஆலயங்களை அபகரிக்கும் சதியில் இவரும் இருக்கிறார். இதுபற்றி இவருக்கும், எனக்கும் ஒருமுறை வாக்குவாதமே நடந்தது.

இந்து ஆலய வளவில் பெளத்த தேரரின் சடலத்தை எரித்தவர் தானே இவர்?

இவர் மீது சட்டம் பாயாது. ஆனால், முகநூலில் எதையாவது சிறுபிள்ளைத்தனமாக எழுதி விடும் தமிழ் பையன்களைத் தேடி வீட்டுக்கு பொலிஸ் வருகிறது. இந்த ஆளுக்கு விசேட சட்ட விலக்கு இருக்கிறது.

ஆகவே, இவரது செயலணியின் பெயரை ‘ஒரு ஆளுக்கு ஒரு சட்டம்’ என நான் பிரேரிக்கிறேன்.

அதேபோல், இவரது – வாயில் வருவதை எல்லாம் பேசும் நடத்தையை ஆட்சேபித்து, இந்த செயலணியில் இருக்கும் தமிழ், முஸ்லிம்கள் உடன் பதவி விலக கோருகிறேன். இல்லா விட்டால் இந்த பாவம் இவர்களையும் சேரும் எனவும் கூறுகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்