09 எம்.எம் மைக்ரோ கைத்துப்பாக்கி, 02 மகசின்களுடன் நபரொருவர் காரைதீவில் கைது
🕔 December 14, 2021
– பாறுக் ஷஹான் –
மைக்ரோ 09 எம்.ம். கைத்துப்பாக்கி மற்றும் 02 மகசின்களை சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவு கொம்புச்சந்தி பகுதியில் செவ்வாய்க்கிழமை (14) மாலை பொலிஸார் மீட்டுள்ளனர்.
ராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விடுதலைப்புலிகளினால் பாவிக்கப்பட்டதாக நம்பப்படும் வெளிநாட்டு தயாரிப்பான மைக்ரோ 09 எம்.எம். கைத்துப்பாக்கியே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
காரைதீவு கொம்புச்சந்திக்கு அருகாமையில் உள்ள வீடொன்றில், பொலிஸ் குழுவினர் தேடுதலை மேற்கொண்டு இந்த கைத்தூப்பாக்கி மற்றும் மகசின்களை மீட்டுள்ளனர்.
குறித்த வீட்டினுள் இந்தத் துப்பாக்கியை தம்வசம் வைத்திருந்ததாக தெரிவிக்கப்படும் 44 வயது மதிக்க தக்க மகாலிங்கசிவம் அசோக் என்ற சந்தேக நபர் கைதாகியுள்ளதுடன், அங்கிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மற்றும் மகசின்களை சம்மாந்துறை பொலிஸார் எடுத்து சென்றுள்ளனர்.
கைதாகிய சந்தேக நபர் சிறிது காலம் தாதி உத்தியோகத்தராக பணியாற்றியுள்ளதோடு, விடுதலைப்புலிகளுடனும் கடந்த காலங்களில் நெருங்கி செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.