போலி சிஐடி மட்டக்களப்பு மாவட்டத்தில் கைது

🕔 December 6, 2021

– பாறுக் ஷிஹான் –

திருட்டு விசாரணை ஒன்றினை சமாளிப்பதற்கு கப்பம் கோரிய போலி சி.ஐ.டி ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  கல்லடி உப்போடை புறநகர் பகுதி ஒன்றில், அண்மையில் நகை திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.

திருட்டு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை அடையாளம் கண்ட காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர், விசாரணை மேற்கொள்வதற்காக குறித்த சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்று விசாரித்துள்ளனர்.

பின்னர் சந்தேக நபர் வீட்டில் இல்லாமையினால் மீண்டும் வருவதாக கூறி அவ்விடத்தில் இருந்து சென்றுள்ள நிலையில், அதே வீட்டுக்குச் சில நிமிடத்தில் மற்றுமொருவர் சென்று, தன்னை சி.ஐ.டி (குற்றப் புலனாய்வு பிரிவு) உத்தியொகத்தர் என பொய்யாகக் கூறி, 10 ஆயிரம் ரூபா கப்பமாக வழங்கினால், குறித்த பிரச்சினையைத் தீர்த்து தருவதாக சந்தேக நபரின் பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து கப்பம் கோரிய போலி சி.ஐ.டி தொடர்பில் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய, நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) இரவு காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா  தலைமையில் சென்ற பொலிஸார், குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் வைத்திருந்த அடையாள அட்டை கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன், கல்விப் பணிப்பாளர் என்று அதில் பதவி  குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்