போலி வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டோம்; சீரழிகிறது வாழ்க்கை: சொந்த மாவட்டத்துக்கு மாற்றல் வழங்குமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உருக்கம்

🕔 November 12, 2021

கிழக்கு மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டு அங்குள்ள பிரதேச செயலகங்களில் பணியாற்றி வரும் தங்களுக்கு, தமது சொந்த மாவட்டத்தில் பணியாற்றுவதற்கான சந்தர்ப்பத்தினைப் பெற்றுத் தருமாறு, சம்பந்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த 26 பேர் கொண்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்முனை ஊடக மையத்தில் நேற்று (12) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தக் கோரிக்கையை விடுத்தனர்.

இது தொடர்பில் மேற்படி ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட – பதுளை மாட்டம் மஹியங்கனை பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் ஏ.எச்.முஜீபா பேசுகையில்;

“கடந்த அரசாங்கத்தில் 18 ஆயிரம் பேர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டோம். இதில் நாங்கள் 26 பேர் – வெளி மாகாணங்களுக்கு வேலைக்கு சென்று மிகவும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம். வெளி மாகாணத்திலுள்ள எமது பிரதேச செயலகங்கள் எம்மை விடுவித்தும் கூட, தொடர்ந்து அங்கு பணியாற்றுமாறு வற்புறுத்தப்படுகிறோம்.

இதனால் நாம் சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம். எமது பிள்ளைகள் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள். அங்கு அவர்களை கொண்டு சீரழிகின்றோம். இதனால் எமது பிள்ளைகளின் படிப்பு உட்பட அனைத்து விடயங்களும் பாதிக்கப்படுகின்றது. இதனால் அனைத்து தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து எமக்காக முன்னின்று தீர்வொன்றினை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என்றார்.

பதுளை மாவட்டம் ஹல்துமுல்லை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் எம்.ரி முஜாஹிதீன் இது தொடர்பாக கூறுகையில்;

“நாங்கள் அம்பாறை மாவட்ட பட்டதாரிகளாக இருந்து தற்போது அபிவிருத்தி உத்தியோர்களாக 01.01.2021 அன்று  நிரந்திர நியமனம் பெற்றவர்கள். பின்னர்  22.04.2021 அன்று  பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தினுள் உள்வாங்கப்பட்டு கண்டி, நுவரெலியா, பதுளை மற்றும் மொனராகலை போன்ற வெளிமாகாணத்தில் உள்ள பகுதிகளுக்கு அவசர அவசரமாக அனுப்பப்பட்டுள்ளோம். ஏனைய அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட மேன்முறையீட்டு படிவமோ அல்லது ஏனைய முறைப்பாடுகளோ மேற்கொள்ள – கால அவகாசம் எமக்கு வழங்கப்படவுமில்லை. மேலதிகாரிகள் எவரும் மேன்முறையீடுகளை  ஏற்றுக்கொள்ளப்படவுமில்லைஇ

தற்போது வெளி மாகாணங்களுக்கு சென்றுள்ள நாம் – பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம். தங்குவதற்கு எமக்கு இடம் வழங்கப்படவில்லை. காரணம் கொரோனா பிரச்சினை மற்றும் சஹ்ரான் தீவிரவாதியின் நடவடிக்கை என்பதை சுட்டிக்காட்டி எம்மை திருப்பி அனுப்புகின்றனர். இது பெரும் பிரச்சினையாக உள்ளது.

மேலும் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இருந்து நியமனத்தை வெளி மாகாணங்களுக்கு வழங்கிய போது, எமக்கு தங்குமிடங்கள் வழங்கப்படவுள்ளதாக போலி வாக்குறுதி ஒன்று வழங்கப்பட்டே அங்கு இரவோடு இரவாக அனுப்பி வைக்கப்பட்டோம். அது மாத்திரமன்றி இரவு வேளையே எமக்கான நியமனமும் கிடைக்கப்பெற்றருந்ததை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இதனால் எல்லா தரப்பினராலும் ஏமாற்றப்பட்டவர்ளாக இருக்கின்றோம். மேலும் நாங்கள் அனைவரும் தமிழ் மொழி மூலம் தான் பட்டப்படிப்பை மேற்கொண்டு இருந்தோம். தமிழ் மொழியில் தான் எமது பட்டதாரி பயிற்சி காலத்தையும் மேற்கொண்டிருந்தோம்.

ஆனால் நாங்கள் தற்போது கடமைக்காக அனுப்பப்பட்டுள்ள பிரதேச செயலகங்களில் தமிழ் பேசுவதற்கு கூட வேறு எவரும் இல்லை. எமது பிரச்சினையை கூட – கூற முடியாத நிலைமையில் நாம் இருக்கின்றோம். சிங்கள மொழி தெரியாது திணறுகின்றோம். தற்போது வாழ்க்கை செலவு என்பதும் பெரும் சுமையாக காணப்படுகின்றது. தற்போது நாம் வெளி மாகாணங்களிலும் எங்களது மனைவிமார் மற்றுமொரு மாகாணத்திலும் தொழில் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் எமது பிள்ளைகளை  பார்ப்பதற்கு கூட யாருமே இல்லாத நிலைமை உள்ளது. வெளிமாகாணங்களுக்கு அனுப்பப்பட்ட 26 பேரும் அண்மையில் திருமணம் முடித்தவர்கள். சிறுகுழந்தைகளுடன் வாழ்ந்து வந்தவர்கள். இது தவிர எமது தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் பிரச்சினைகளை சுட்டிக்காட்டிய போதிலம் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் இவ்விடத்தில் கூற விரும்புகின்றேன்.

மேலும் வெளி மாகாணங்களில் இணைப்புச் செய்யப்பட்ட பிரதேச செயலகத்தில் கூட, எமக்கான கதிரை மேசைகளோ இல்லை. அங்கு எம்மை ஒரு விதமாக நடத்துகின்றனர். எந்த அடிப்படையில் எம்மை வெளிமாகாணங்களுக்கு தெரிவு செய்து அனுப்பினார்களோ என்பதும் எமக்கு தெரியாது.

இது குறித்து நாம் கேட்டிருந்தும் உரிய பதில் வழங்கப்படவில்லை. பதுளை, நுவரெலியா, மொனராகல மற்றும் கண்டி போன்ற பகுதிகளுக்கு நாம் அனுப்பப்பட்டுள்ளோம்.

எனவே எமது பிரச்சினைகளை இனியாவது கவனத்தில் எடுங்கள். எமது பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களம் உடனடியாக எமது பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத்தர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றோம்” என்றார்.

மேற்படி வெளிமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 26 பேரும் கடந்த  நல்லாட்சி அரசாங்கத்தில் பட்டதாரி பயிலுநர்களாக இணைப்பு செய்யப்பட்டு 01.01.2021 அன்று நிரந்திர நியமனத்துக்கு உள்வாங்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு உள்வாங்கப்பட்ட 26 பேரும் எதுவித நேர்முகப்பரீட்சைகளும் இன்றி 22.04.2021 அன்று இரவோடு இரவாக மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அறிக்கை இட வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டு, அம்பாறை மாவட்ட செயலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்