மங்களவின் உடல் தகனம் செய்யப்பட்டது; நெருங்கிய குடும்பத்தவர்களுக்கு மட்டுமே உள்ளே செல்ல அனுமதி
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் உடல் இன்று (24) கொழும்பு பொரல்ல பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
கொவிட் சுகாதார வழிகாட்டுதல் காரணமாக, அவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இதன்போது உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
ஆயினும் மயானத்துக்கு வெளியில் பல அரசியல்வாதிகள் வருகை தந்திருந்தனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மங்கள சமரவீர இன்று காலமானார். இறக்கும் போது அவருக்கு 65 வயது.
அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டதாக அடையாளம் காணப்பட்ட சில நாட்களின் பின்னர், மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்துக்கான வலுவான குரலாக மங்கள இருந்து வந்தார்.
முன்னைய அரசாங்கத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சராக பணியாற்றிய மங்கள சமரவீர, கடந்த பொதுத் தேர்தலில் களமிறங்கிய போதும் – அதிலிருந்து வாபஸ் பெற்று, அரசியலில் இருந்து விலகினார்.