இஷாலினிக்கு றிசாட் பதியுதீன் மகள் கொடுத்த 05 ஆயிரம் ரூபா; தர்க்கப்பட்ட வேலைக்காரப் பையன்: முஷாரப் எம்.பி வெளியிட்ட முக்கிய தகவல்கள்

🕔 July 31, 2021

றிசாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய இஷாலினியின் மரணம் தொடர்பான வழக்கில், பொய்யானதும் பிழையானதுமான தகவல்களை நீதிமன்றில் சொலிசிட்டர் ஜெனரல் வழங்கினார் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப் தெரிவித்தார்.

வியூகம் செய்தித்தளத்தின் ‘பேஸ்புக்’ நேரலை நேர்காணலில் நேற்று வெள்ளிக்கிழமை கலந்து கொண்டு பேசியபோதே அவர் இதனைக் கூறினார்.

குறித்த நேர்காணலில் முஷாரப் தெரிவித்த விடயங்கள் வருமாறு;

  • 2020 நொவம்பர் 18 அன்றுதான் றிசாட் பதியுதீன் வீட்டுக்கு இஷாலினி வந்தார்.
  • றிசாட் பதியுதீன் வீட்டில் 07 அல்லது ஏழரை மாதங்கள் மட்டுமே இஷாலினி இருந்தார்.
  • இஷாலினி எரிந்த போது றிசாட் பதியுதீனின் மாமனாரும் மாமியாரும்தான் நெருப்பை அணைத்திருக்கின்றனர்.
  • எரிந்து கொண்டிருந்த இஷாலினி அங்கிருந்த நீர்த்தாங்கியொன்றில் தானாகவே சென்று அமர்ந்தார்.
  • என்ன நடந்தது என்று இஷாலினியிடம் அங்கிருந்தவர்கள் கேட்டபோது; ‘பத்திற்று’ என்று பதிலளித்திருக்கிறார்.
  • றிசாட் பதியுதீனின் மனைவியும் இதனைத்தான் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
  • காலை 7.10 இல் இருந்து 7.30 மணிக்குள் 119 சேவை அம்புலன்ஸ் வண்டியை அழைத்து வைத்தியசாலைக்கு இஷாலினியை அனுப்பியுள்ளனர்.
  • வைத்தியசாலையில்காலை 8.20 மணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
  • 16 வயது 06 நாட்கள் நிறைவடைந்த நிலையில்தான் றிசாட் பதியுதீன் வீட்டில் இஷாலினி வேலைக்கு சேர்ந்துள்ளார் என்பது நீதிமன்றில் தெரியவந்துள்ளது.
  • கடைசியாக நடந்த நீதிமன்ற அமர்வில் பொய்யான, பிழையான தகவல்களை சொலிசிட்டர் ஜெனரல் கூறி, திரும்பத் திரும்ப திருத்திக் கொண்டுள்ளார்.
  • சம்பவம் நடந்தது காலை 6.30 மணிக்கு என்றும், வைத்தியசாலையில் அனுமதித்தது காலை 11 மணிக்கு எனவும் நீதிமன்றில் சொலிசிட்டர் ஜெனரல் அப்பட்டமான பொய்யை சொன்னார்.
  • றிசாட் பதியுதீன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களில் – வீட்டின் வெளியில் பொருத்தப்பட்டவை வேலை செய்தன. வீட்டின் உள்ளே பொருத்தப்பட்டவை ஆறேழு மாதங்களுக்கு முன்பாகவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
  • ஆனால் சம்பவ தினம் வீட்டில் இருந்த சிசிரிவி ஒஃப் செய்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுவதெல்லாம் அப்பட்டமான பொய்யாகும்.
  • அரச பகுப்பாய்வு திணைக்களத்தினர், குற்றவியல் திணைக்களத்தினர், கைரேகை பரிசோதனைப் பிரிவினர், சிசிரிவி கமராக்களை பரிசோதிப்பவர்கள் எல்லோரும் றிசாட் பதியுதீன் வீட்டுக்கு வந்தார்கள்.
  • அப்போது குறித்த சிசிரிவி கமராக்கள் நீண்ட காலமாக வேலை செய்யாமல் இருப்பது தெரிய வந்தது.
  • ஜுலை 03ஆம் திகதி சம்பவம் நடந்தது, ஜுலை 15ஆம் திகதி இஷாலினி இறந்தார்.
  • இடைப்பட்ட காலத்தில் அந்தப் பிள்ளை தொடர்பில் றிசாட் வீட்டார் தீவிர அக்கறையெடுத்தனர்.
  • றிசாட் வீட்டாரிடம் இஷாலினியின் தாயார் ; “நீங்கள் இப்படி அன்பாக இருக்கும் போது, இந்தப் பிள்ளை ஏன் இப்படி செய்தது” என்று கவலைப்பட்டுள்ளார்.
  • இஷாலினி வைத்தியசாலையில் இருந்தபோது, றிசாட் பதியுதீன் மனைவியிடம் இஷாலினியின் தாய் மற்றும் சகோதரர்; “அம்மா நீங்கள் கவலைப்படாதீங்க, எங்கள் பிள்ளை எழும்பி வரும்” என்று கூறியிருக்கின்றனர்.
  • இஷாலினியின் மரண வாக்குமூலத்தில், நானாகவே இப்படி தீமூட்டிக் கொண்டேன் என்று சொன்னதாக தகவல்கள் கிடைக்கின்றன. அந்த தகவல் ஊர்ஜிதமானால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விடும்.
  • 15ஆம் திகதிக்குப் பின்னர் இந்த விடயத்தை ஒரு சிலர் குழப்புவதற்கு முயற்சி செய்தனர்.
  • றிசாட் பதியுதீன் வீட்டில் நீண்ட காலமாக ஒரு மண்ணெண்ணெய் போத்தல் இருக்கிறது.
  • இஷாலினி மண்ணெண்ணெய் ஊற்றி பற்றவில்லை என்கிற எண்ணம் றிசாட் பதியுதீன் வீட்டாருக்கு இருக்கிறது. ஏனென்றால் அங்குள்ள போத்தலினுள் இருந்த மண்ணெண்ணெய் அப்படியேதான் இன்னும் இருக்கிறது.
  • இந்தியாவில் கல்வி கற்கும் றிசாட் பதியுதீனின் மகள், இந்தியாவுக்குச் செல்லும் போது இஷாலினிக்கு 05 ஆயிரம் ரூபா பணம் கொடுத்து விட்டுச் சென்றிருந்தார்.
  • இதனை அறியாத அங்கிருந்த வேலைக்கார பையன் ஒருவர், இஷாலினி ஏதோ பணத்தை திருடி விட்டதாக நினைத்து அவருடன் வாய்த்தர்க்கப்பட்டிருக்கிறார். பிறகு வியடத்தை தெளிவுபடுத்தியவுடன் அந்த விடயம் முடிந்து விட்டது.
  • இஷாலினிக்கு றிசாட் பதியுதீனின் மகள் 05 ஆயிரம் ரூபா அன்பளிப்பு வழங்கும் அன்பான சூழ்நிலைதான் அங்கு இருந்துள்ளது.

இவ்வாறு இன்னும் பல விடயங்களையும் அந்த நேர்காணலில் முஷாரப் தெரிவித்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்