கசிப்பு உற்பத்தியின் போது பரல் வெடித்து நபர் பலி; மற்றொருவருக்கு காயம்: வளத்தாப்பிட்டியில் சம்பவம்
சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட போது கசிப்பு பரல் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று வியாழக்கிழமை சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வளத்தாப்பிட்டியைச் சேர்ந்து 56 வயதுடைய ஏகாம்பரம் தங்கவேல் என்பவரே இவ்வாறு உயிரிந்துள்ளார்.
குறித்த பிரதேசத்திலுள்ள ஓடங்கரை வாய்க்கால் கரையில் தந்தையும் மகனும் அவர்களுடன் உறவினர் ஒருவர் உட்பட 03 பேர் சம்பவதினம் அதிகாலை கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன் போது கசிப்பு உற்பத்திக்கான பரல் வெடித்து சிதறி தீபரவியதையடுத்து சம்பவ இடத்தில் 56 வயதுடைய தந்தை இறந்தார்.
தந்தையின் சடலத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்ற மகன், பின்னர் படுகாயமடைந்த உறவினரான 26 வயதுடையவரை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டு தலைமறைவாகியுள்ளார் என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.