பொறுப்பற்ற வகையில் தகவல் வெளியிட்ட டொக்டர் கொஸ்தா: நாடாளுமன்றில் இம்ரான் எம்.பி குற்றச்சாட்டு

🕔 May 19, 2021

– பைஷல் இஸ்மாயில் –

கிண்ணியாவில் இறந்த கொரோனா நோயாளிகளின் உடல்கள் ரகசியமாக அடக்கம் செய்யப்படுவதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் டி.ஜீ.எம். கொஸ்தா கூறிய விடயத்தை வாபஸ் பெற வேண்டும் என நாடளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

இல்லாவிட்டால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.

நேற்றைய தினம் (18) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த விடங்களைக் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்;

“கிண்ணியாவில் தற்போது கொவிட் தொற்று வேகமாக பரவி வருவதால் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிவுக்குட்பட்ட 10 கிராம சேவகர் பிரிவுகளும், குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிவுக்குட்பட்ட 02 கிராம சேவகர் பிரிவுகளும் முடக்கப்பட்டுள்ளன.

முக்கியமாக இந்த மூன்றாம் அலையில் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 170 தொற்றாளர்களும் குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 58 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் மூன்றாம் அலையில் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 மரணங்களும், குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 மரணங்களும் நிகழ்ந்துள்ளன.

ஆகவே அதிகமாக பாதிப்படைந்துள்ள கிண்ணியா பகுதியில் பின்வரும் விடயங்கள் உடனடியாக செய்யப்பட வேண்டும்.

தனிமைப்படுத்தல் நிலையம் அவசரமாக அமைக்கப்படவேண்டும். தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்பட வேண்டும். ஆனால், கொரோனா குழுவினர் பல இடங்களை சிபாரிசு செய்தபோதும் அது அமைக்கப்படவில்லை. அங்கு அதிகமான மரணங்கள் நிகழ்வதால் கிண்ணியாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்கப்பட வேண்டும். பொருத்தமான இடமாக மஹரூப் கிராம மையவாடி அடையாளப்படுத்தப்பட்டு மாவட்ட செயலகத்தால் பரிந்துரை செய்யப்பட்ட போதும் இதுவரை அதற்கான அனுமதி கிடைக்கவில்லை.

மரணித்த உடல்களை அடக்கம் செய்ய கொழும்பில் இருந்து அனுமதி வர தாமதமானதால் உடல்களை அடக்கம் செய்வதிலும் தாமதம் ஏற்படுகிறது. ஆகவே அடக்கம் செய்வதுக்குரிய அனுமதியை விரைவாக சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும்.

கிண்ணியா பிரதேசத்தில் பிறந்தவனாக இச்சபையில் நான் ஒரு விடயத்தை பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளேன். கிண்ணியாவில் இறந்த கொரோனா நோயாளிகள் ரகசியமாக அடக்கம் செய்யப்படுகின்றார்கள் என திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் டி.ஜீ.எம். கொஸ்தா தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது.

கிண்ணியாவில் பொலிஸார் கடமையில் உள்ளனர். அதேபோல பாதுகாப்புப் படையினரும் கடமையில் உள்ளனர். சகல இறப்புகளும் உரிய முறைப்படி பொலிசுக்கு அறிவிக்கப்பட்டு, உரிய விசாரணைகளின் பின்பே அடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்கப்படுகின்றது.

இந்நிலையில் இவரின் பொறுப்பற்ற கருத்தை மிக வன்மையாக கண்டிக்கிறேன். பொலிசார், பாதுகாப்பு படையினர், சுகாதர வைத்திய அதிகாரி, திடீர் மரண விசாரணை அதிகாரிகளைத் தாண்டி எவ்வாறு ரகசியமாக அடக்கம் செய்ய முடியும். இவர் இக்கருத்தை உடனடியாக வாபஸ் பெறவேண்டும் இல்லாவிடின் இவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்