சமூக ஊடகங்களில் வெளியாகும் போலிச் செய்தி, குரோதப் பதிவு: உள ரீதியாக எதிர்கொள்வது எப்படி?

🕔 March 24, 2021

– யூ.எல். மப்றூக் –

மூக ஊடகமொன்றில் தன்னைப்பற்றி வெளிவந்த பொய்யான செய்தியொன்றினால் மிகவும் அவமானத்தை உணர்ந்ததாகவும், கவலைக்குள்ளானதாகவும் கூறும் கே.எம். முனவ்வர், அதனை எதிர்கொள்வதற்கு – தான் கடுமையான சவால்களை எதிர்கொண்டதாகவும் கூறுகின்றார்.

முனவ்வர் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகர். கடந்த வருடம் அவரின் படத்துடன் ‘பேஸ்புக்’ இல் பொய்யான தகவவொன்று வெளியாகியுள்ளது. போலிக் கணக்கு ஒன்றினூடாகவே அந்த பொய் தகவல் பதியப்பட்டிருந்ததாக அவர் கூறுகின்றார்.

“மேசன் தொழிலாளி ஒருவர் எழுதுவது போன்று அந்த தகவல் பதியப்பட்டிருந்தது. அந்த நபர் எனது வீட்டில் கட்டட நிர்மாண வேலை செய்ததாகவும், அந்த வேலைக்குரிய கொடுப்பனவில் ஒரு தொகையை  நான் கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது” என்கிறார் முனவ்வர்.

“பேஸ்புக் இல் எனக்கும் கணக்கு இருக்கிறது. ஆனால் நான் அதை கிட்டத்தட்ட பயன்படுத்துவதில்லை. அதனால் என்னைப் பற்றி வெளியான பொய் செய்தியை முதலில் நான் காணவில்லை. அதைப் பார்த்த எனது நண்பர்களும், என்னைத் தெரிந்தவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விடயத்தைக் கூறினார்கள்”.

“அந்த தகவலை நான் பார்த்த போது, அதை ஏராளமானோர் ‘ஷெயார்’ செய்திருந்தார்கள். பலர் எனக்கு எதிராக மோசமான கருத்துக்களைப் பதிவிட்டிருந்தனர். அந்தத் தகவலின் உண்மைத்தன்மை பற்றி ஆராயாமலேயே, பலர் அதனை நம்பியிருந்தனர்” என முனவ்வர் கவலையுடன் பேசினார்.

கே.எம். முனவ்வர்

“பொய்யான அந்தத் தகவலில் இருந்த – பெரும் ஆபத்து என்னவென்றால், தமிழர் ஒருவரின் பெயரில் திறக்கப்பட்டிருந்த கணக்கிலேயே என்னைப் பற்றி எழுதப்பட்டிருந்தது. தமிழரான மேசன் தொழிலாளி ஒருவரை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த நான் ஏமாற்றி விட்டதாக, அந்தச் தகவலின் கீழ், சிலர் கருத்துத் தெரிவித்திருந்தனர். என்மீது குரோதம் கொண்டு எழுதப்பட்டிருந்த அந்தப் பொய் செய்தி, இனங்களிடையே கசப்பினை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்திருந்தது” என்று, அவர் விவரித்தார்.

இணையக் குற்றம்

2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றின்படி, இலங்கையில் சுமார் 64 லட்சம் பேர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றமை தெரியவந்துள்ளது. நாட்டின் சனத்தொகையில் இது 30 வீதமாகும். ‘சேர்ட்’ (CERT) என சுருக்கமாக அழைக்கப்படும் இணையப் பாதுகாப்புக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இலங்கையில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் சமூக ஊடகம் ‘பேஸ்புக்’ ஆகும்.

சமூக ஊடகங்கள் நல்ல விடயங்களுக்காகப் பயன்படுத்தப்படும் அதேவேளை, தவறான காரியங்களுக்காகவும் உபயோகிக்கப்படுகின்றன. குறிப்பாக, போலிச் செய்திகளைப் பரப்புவதற்காகவும், குரோத பதிவுகளை வெளியிடுவதற்காகவும் சமூக ஊடகங்களை சிலர் பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறான போலிச் செய்திகள் மற்றும் குரோதப் பதிவுகள் – தனி நபர்கள் மீதும், சமூகங்களிடையேயும் ஏற்படுத்தும் தாக்கங்கள் மிகவும் மோசமானவையாகும். இவற்றை எதிர்கொள்வதும் பொதுவாக சிக்கலுக்குரிதாக உள்ளது.

குறிப்பாக போலிச் செய்தி மற்றும் குரோதப் பதிவுகளால் தனிநபர்கள் உள ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். அதேவேளை, தமக்கு எதிரான போலிச் செய்திகள் ஏற்படுத்தும் தாக்கங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதையும், அவற்றுக்கான சட்ட நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பதையும் கணிசமானோர் அறியாமலுள்ளனர்.

இணையத்தின் ஊடாக ஒருவர் கேலி செய்யப்படுதல், மிரட்டப்படுதல், அச்சுறுத்தப்படுதல், பாரபட்சத்துக்கு உள்ளாக்கப்படுதல் மற்றும் கட்டாயப்படுத்தப்படுதல் போன்றவை ‘இணைய வன்முறை’ அல்லது ‘சுரண்டல்’ எனப்படுகிறது. தனிப்பட்ட படங்கள் அல்லது வீடியோகள், கேலிப்படங்கள், தொகுத்து அமைக்கப்பட்ட படங்கள் போன்றவற்றினை அனுமதி இல்லாமல் வெளியிடுவதும் இணைய வன்முறையாகவே கருதப்படுகிறது. 

அந்த வகையில், மேற்சொன்ன முனவ்வர், இணைய வன்முறைக்கு ஆளாகியுள்ளார். தன்னைப்பற்றிய பொய்யான தகவல் ‘பேஸ்புக்’ இல் வெளியானதை அடுத்து, சில நாட்கள் அவமானத்தால் – தான் சோர்வுற்றிருந்ததாகவும், இதை எவ்வாறு எதிர்கொள்வது எனத் தெரியாமல் தடுமாறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முனவ்வர் மட்டுமன்றி இணைய வன்முறைக்குள்ளாகுவோரில் பெரும்பாலானோர் உள ரீதியாகப் பாதிக்கப் பாதிக்கப்படுவதோடு, அந்த சம்பவங்களை எதிர்கொள்ள முடியாமல் தவித்திருக்கின்றனர் என்பதை, பாதிக்கப்பட்டோரின் அனுபவங்களினூடாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

உள ரீதியாக எதிர்கொள்ளல்

இந்த நிலையில், “இணைய வன்முறைகளை எதிர்கொள்தல் மற்றும் அவற்றிலிருந்து மீள்தல் போன்ற விடயங்களில், ஒவ்வொரு தனி நபரிடத்திலும் காணப்படும் ‘சமாளிக்கும் அல்லது முகம்கொடுக்கும் திறன்’ (Coping Skill) பெரிதும் ஆதிக்கம் செலுத்துகிறது” என்கிறார் மனநல வைத்தியர் யூ.எல். சறாப்டீன்.

டொக்டர் யூ.எல் சறாப்டீன்

“சில விடயங்களை நம்மால் மாற்ற முடியாது. மாற்ற முடியாதவற்றில் சில விரும்பத் தகாத விடயங்களை நாம் எதிர்கொள்கிறோம். அவற்றுக்காக வருந்திக் கொண்டேயிருக்க முடியாது. அவற்றினை நாம் துணிவுடன் கடந்து விட வேண்டும் அல்லது அதனுடன் வாழப்பழக வேண்டும். அதற்கான மனநிலையை நமக்குள் வளர்த்துக் கொள்தல் அவசியமமாகும். அதைத்தான் முகம்கொடுக்கும் திறன்’ (Coping Skill) என்கிறோம். அதேபோன்று மாற்றக் கூடிய விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான உரிமையும் நமக்கு உண்டு”.

”ஒருவரிடமுள்ள முகம்கொடுக்கும் அல்லது சமாளிக்கும் திறனை வளர்த்து விடுவதில் அவரின் எதிர்த் தரப்புக்கு முக்கிய பங்கு உள்ளது” என்று டொக்டர் சறாப்டீன் விளக்கினார்.

ஒவ்வொருவரும் அவர்களிடமுள்ள ‘எதிர்கொள்ளும் திறனுக்கு’ ஏற்பவே நிலைமைகளைக் கையாளத் தொடங்குகின்றனர் என்பதற்கு மற்றொரு உதாரணத்தையும் டொக்டர் சறாப்டீன் கூறினார்.

“நபரொருவர் நண்பரிடம் ஒரு தொகை பணம் கடன் வாங்குகின்றார். ஆனால் சொன்ன திகதியில் கடனை திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இந்த நிலையை எவ்வாறு கையாள்வது?

சமாளிக்கும் அல்லது முகம்கொடுக்கும் திறன் குறைந்தவர், கடன்காரருக்குப் பயந்து ஒளிந்து திரிவார். கடனால் ஏற்பட்ட கவலையை மறப்பதற்காக போதைப் பொருள் பாவிக்கத் தொடங்குவார். பிறகு அதற்கு அடிமையாவார்.

ஆனால், ‘முகம்கொடுக்கும் திறன்’ சிறப்பாக உள்ளவர், அந்த நிலைமையை வேறு விதமாகக் கையாள்வார். கடன் கொடுத்தவரைச் சந்தித்து, தனது நிலைமையை விளக்குவார், கடனை திருப்பிச் செலுத்துவதற்காக இன்னொரு திகதியை கேட்பார், கடனில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வார்.

சமூக ஊடகங்களில் வன்முறைக்கு உள்ளாவோரும், அவ்வாறான நிலைமைகளை சிறந்த முறையில் ‘எதிர்கொள்வதற்கு, தம்மிடமுள்ள ‘சமாளிக்கும் திறனை’ (Coping skill) வளர்த்துக் கொள்தல் வேண்டும்” என்கிறார் மனநல வைத்தியர் சறாப்டீன்.

“நபரொருவர் அல்லது ஒரு சமூகம் குறித்து – வெறுப்பு அல்லது குரோதக் கருத்துக்களை வேறொரு நபர் வெளியிடுவதற்கு பிரதான காரணம், அந்த நபர் அல்லது அந்த சமூகம் பற்றி – அவர் கொண்டுள்ள ‘தப்பான அபிப்பிராயம்’ (Prejudice) ஆகும். 

நம்மைப் பற்றி குரோதமான அல்லது வெறுப்பான கருத்துக்களை வெளியிடுபவர், அதன் மூலம் நம்மை தனிமைப்படுத்த அல்லது ஒதுக்கி வைக்க முற்படுகின்றார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நபரொருவர் சமூகமொன்றிலிருந்து ஒதுக்கப்படும் போது, அந்த நிலைமை அவருக்கு மனச்சோர்வை அல்லது மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக அமையும்.

எனவே, குரோதமான அல்லது வெறுப்பான கருத்துக்களை எதிர்கொள்வோர், அதனை வெளியிடுகின்றவரிடம் பதிந்துள்ள – தன்னைப் பற்றிய தப்பான அபிப்பிராயத்தைக் களைவதற்கு முயற்சிக்க வேண்டும். தன்னைப் பற்றி வெளியிடப்பட்டுள்ள குரோதக் கருத்துக்கு மூல காரணமான, தப்பபிப்பிராயங்கள் குறித்து – நாகரீகமாக விளங்கப்படுத்துதல் வேண்டும்“ எனவும் டொக்டர் சராப்டீன் குறிப்பிட்டார்.

சட்ட நடவடிக்கையிலுள்ள சிரமம்

இது இவ்வாறிருக்க, சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் போலிச் செய்திகள் மற்றும் குரோதக் கருத்துக்களால் பாதிக்கப்படுவோரில் கணிசமானோர், அவற்றுக்கு எதிராக, எவ்வாறு சட்ட நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து அறியாமலுள்ளனர். அதேவேளை சட்ட நடவடிக்கை எடுப்பதிலுள்ள சிரமம் குறித்தும் சிலர் கவலை தெரிவிக்கின்றனர்.

கல்முனையைச் சேர்ந்த வர்த்தகர் எம்.எச்.எம். இப்றாகிம், தனக்கு அவமானத்தையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும் வகையில் தொகுத்து அமைக்கப்பட்டு ‘பேஸ்புக்’ இல் வெளியிடப்பட்ட படம் தொடர்பாக, பொலிஸ் நிலையத்தில் முறையிடச் சென்ற போது, ஏற்பட்ட அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

எம்.எச்.எம். இப்றாகிம்

“இலங்கைக்கான அமெரிக்க தூதுவருடன் நான் எடுத்துக் கொண்ட படமொன்றில், அமெரிக்கத் தூதுவரின் உருவத்தை அகற்றி விட்டு, அதற்குப் பதிலாக வேறொரு நபரின் உருவத்தை இணைத்து – தொகுத்தமைக்கப்பட்ட படமொன்றை, உள்ளுர் அரசியல்வாதியொருவர் அவரின் ‘பேஸ்புக்’ பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

அமெரிக்கத் தூதுவரின் உருவத்துக்குப் பதிலாக எனக்கு அருகில் இணைக்கப்பட்ட உருவத்துக்குரிய நபர் – கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதற்கு ஆதரவாக ஊடகங்கள் முன்னிலையில் குரல் கொடுத்த நபராவார்.

‘பேஸ்புக்’ இல் வெளியான அந்தப் படம் ‘தொகுத்து அமைக்கப்பட்டது’ என்பதை அறியாத பலர், குறித்த நபருடன் இணைந்து நான் படம் எடுத்துக் கொண்டதாக நினைத்துக் கொண்டு, அந்த நபரை மட்டுமன்றி என்னையும் சேர்த்து ‘முஸ்லிம் சமூகத் துரோகி’ என திட்டினார்கள். என்னை கொல்ல வேண்டும் என அந்தப் படத்தின் கீழ் சிலர் கருத்திட்டிருந்தனர். அதனால், நான் பெரும் அவமானத்துக்குள்ளானதோடு, உயிர் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் நிலையும் ஏற்பட்டது” என்றார் பாதிக்கப்பட்ட இப்றாகிம்.

“பேஸ்புக் இல் எனது படம் தொகுத்து அமைக்கப்பட்டு வெளியிடப்பட்டதை அடுத்து, அது தொடர்பில் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறையிடச் சென்றேன். அப்போது, என்னை அலைக்கழிக்கும் வகையில் பொலிஸார் நடந்து கொண்ட பின்னர்தான் முறைப்பாட்டைப் ஏற்றுக் கொண்டனர். பின்னர் இது தொடர்பில் கொழும்புக்குச் சென்று முறையிடுமாறும் கூறினர். அதற்கு நான் விரும்பவில்லை”.

“என்னை அவமானப்படுத்தும் வகையிலும் எனக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் ஒருவர் எனது படத்தை தொகுத்து அமைத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதற்காக நியாயம் தேடி எனது நேரத்தையும் பணத்தையும் செலவு செய்து, கொழும்புக்கு நான் செல்ல வேண்டும் என்பது – என்ன வகை நியாயம் என்று எனக்குப் புரியவேயில்லை” என இப்றாகிம் அலுத்துக் கொண்டார்.

சட்டத்தை அணுகுவதற்கான வழி

உண்மையில் இணைய வன்முறைக்குள்ளாவோர் சட்ட ரீதியான நிவாரணத்தைப் பெற்றுக் கொள்வதென்பது அத்தனை கடினமான காரியம்தானா என்பது குறித்தும், போலிச் செய்தி மற்றும் குரோத கருத்துக்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவோருக்கு எதிராக எவ்வாறு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் இடம் கேட்டோம்.

“சமூக ஊடகங்களில் குற்றம் புரிந்தார் எனும் அடிப்படையில், ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையிலான சட்ட ஏற்பாடுகள் இலங்கையில் இல்லை” என்கிறார்  சட்டத்தரணி பஹீஜ். ஆனாலும், போலிச் செய்தியொன்றை சமூக ஊடகங்களில் ஒருவர் பரப்புவாராயின், அந்த செய்தியின் உள்ளடக்கத்தின் அடிப்படையில், செய்தியை வெளியிட்டவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்” என்றும் அவர் கூறினார்.

உதாரணமாக தேர்தல் காலத்தில் தேர்தல் தொடர்பில் போலிச் செய்தியொன்றை வெளியிட்டால், தேர்தல் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் எனவும், நீதித்துறை தொடர்பில் ஒருவர் போலியான செய்தியை வெளியிட்டால், நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் விளக்கினார்.

“போலியான செய்தியொன்றினால் இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் உருவாகி, கலவரம் ஒன்று ஏற்படும் சூழலொன்று ஏற்படுகிறது என வைத்துக் கொள்வோம். அப்போது அந்தச் செய்தியை வெளியிட்ட நபருக்கு எதிராக, ‘இன ரீதியான முரண்பாடுகளைத் தோற்றுவித்தமை’ மற்றும் ‘கலவரத்தை ஏற்படுத்தியமை’ ஆகிய குற்றங்களுக்காக, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச ஒப்பந்த சட்டத்தின் (ICCPR) கீழ், நடவடிக்கை எடுக்க முடியும்”.

“போலிச் செய்தியொன்று நபரொருவரை அச்சுறுத்தம் வகையில் அமைந்திருந்தால், அந்தச் செய்தியை வெளியிட்டவருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ், ‘குற்றமுறை அச்சுறுத்தல்’ எனும் அடிப்படையில் வழக்குத் தொடர முடியும்”.

“இவ்வாறான செயற்பாடுகள் அல்லாமல் ஒரு நபருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் அவதூறான செய்தியொன்று வெளியிடப்பட்டால், அதற்கு எதிராக சிவில் சட்டத்தின் கீழ் ‘மான நஷ்ட வழக்குத் தொடரலாம்”.

“போலிச் செய்தியொன்றை வெளியிட்டதாக ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டால் – அதனை வெளியிட்ட நபர், நீதிமன்றில் அந்தச் செய்தி உண்மையானது எனவும், அது பொதுமக்களுக்குத் தேவையானது என்பதையும் நிரூபிக்க வேண்டும். அவ்வாறு நிரூபித்தால் அவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.” எனவும் அவர் விளக்கினார்.

இதேவேளை, இணையக் குற்றங்கள் தொடர்பில் புலனாய்வு செய்வதற்குப் போதுமான தொழில்நுட்ப அறிவுடையோராக இலங்கை பொலிஸ் திணைக்களத்திலுள்ளோர் இல்லை எனவும் சிரேஷ்ட சட்டத்தரணி பஹீஜ் சுட்டிக்காட்டினார்.

அதனால்தான் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இயங்கி வரும் ‘சேர்ட்’ (CERT) எனப்படும் இணையப் பாதுகாப்புக்கான தேசிய மையத்தில், இணையக் குற்றங்களை முறையிடுமாறு பொலிஸார் கூறுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

“கிராமத்திலுள்ள ஒருவர் – இணைய வன்முறைக்கு ஆளாகும் போது, அதனை முறைப்பாடு செய்வதற்காக கொழும்புக்குச் செல்ல வேண்டும் என்பது, கஷ்டமான விடயம்” எனவும் சட்டத்தரணி பஹீஜ் குறிப்பிட்டார்.

“கணினி குற்றச் சட்டம் (Computer crime act) எனும் ஏற்பாடு நாட்டில் உள்ள போதும், அந்தச் சட்டத்தின் கீழ் கணினி ஹேக்கிங் (Computer hacking), இணையத்தின் ஊடாக நடைபெறும் நிதி மோசடி போன்ற குற்றங்களுக்கு எதிராகத்தான் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் இணையப் பரப்பில் நடைபெறும் அனைத்து குற்றச் செயல்களுக்கும் எதிராக, முறையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளத்தக்க சட்டங்கள் இன்னும் இல்லை” எனவும் அவர் கூறினார்.

“மறுபுறமாக, இணையப் பரப்பில் நடைபெறும் குற்றங்களை, குற்றவியல் சட்ட ஏற்பாடுகளுக்குள் கொண்டு வந்து, அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என வாதிடப்படுகிறது” என்றும் அவர் தெரிவித்தார்.

சமூக ஊடகமொன்றில் ஒருவரைப்பற்றி பொய்யான செய்தி அல்லது அவருக்கு எதிரான குரோதக் கருத்துக்கள் வெளியிடப்பட்டால், பாதிக்கப்படும் நபர் எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகள் என்ன என – சட்டத்தரணி பஹீஜ் இடம் கேட்டோம்.

சட்டத்தரணி எம்.எம். பஹீஜ்

“பாதிக்கப்பட்டவர் முதலில் பொலிஸ் நிலையமொன்றில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தல் நல்லது.

அத்தோடு இணையத்தில் வெளியிடப்பட்ட போலிச் செய்தி மற்றும் குரோதக் கருத்துக்கள்களை ‘ஸ்கிரீன் ஷொட்’ (Screen shot) எடுத்து வைத்துக் கொள்தலும் அவசியமாகும்.

போலிச் செய்தி அல்லது குரோதக் கருத்தை வெளியிட்ட நபர் யார் என தெரிந்தால், அவருக்கு எதிராக பாதிக்கப்பட்டவர் தனது சட்டத்தரணி ஊடாக நஷ்டஈடு வேண்டி, கோரிக்கைக் கடிதம் (letter demand) ஒன்றை அனுப்ப முடியும்.

இணையத்தில் வெளியிடப்படும் போலிச் செய்தி மற்றும் அவதூறுக் கருத்துக்களை ‘ஷேயார்’ (பகிர்தல்) செய்தல், குற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகக் கருதப்படும்” எனவும் சட்டத்தரணி குறிப்பிட்டார்.

இணையப் பாதுகாப்புக்கான தேசிய மையம் (CERT) 2019ஆம் ஆண்டு வெளியிட்ட ஆண்டு அறிக்கையில், அவர்களுக்குக் கிடைக்கப் பெற்ற இணையக் குற்ற முறைப்பாடுகளில் அதிகமானவை – சமூக ஊடகங்களில் நிகழ்ந்தவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றிலும் ‘பேஸ்புக்’ இல் நிகழ்ந்த சம்பவங்கள்தான் அதிகம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையப் பாதுகாப்புக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 2019ஆம் ஆண்டு அவர்களுக்கு 3566 இணையக் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவற்றில் சமூக ஊடகங்கள் தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2662 என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதோடு, அவற்றில் வெளியிடப்படும் போலிச் செய்தி மற்றும் குரோதக் கருத்துக்களால் பாதிக்கப்படுவோர் அவற்றினை எதிர்கொள்ளும் வகையிலான திறன்களை வளர்த்துக் கொள்தலும் அவசியமாகும்.

(தினகரன் பத்திரிகையில் இன்று (24 மார்ச் 2021) வெளியான கட்டுரையின் முழுமையான வடிவம்)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்