இரணைதீவில் மக்கள் வசிக்காத பகுதில்தான், கொரோனா உடல்களை அடக்கம் செய்ய தீர்மானம்: அசேல குணவர்தன
இரணைதீவில் பொது மக்கள் வசிக்காத பகுதியில் மாத்திரமே கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக மரணித்தவர்களின் உடலை அடக்கம் செய்வது குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த 25 ஆம் திகதி வெளியானது.
அதனைத் தொடர்ந்து குறித்த சடலங்களை அடக்கம் செய்வதற்காக இரணைதீவு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.
அரசாங்கத்தின் குறித்த தீர்மானித்திற்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். அத்துடன், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.