உடல்களை பலாத்காரமாக தகனம் செய்கின்றமை முடிவுக்கு வரவேண்டும்: ஐ.நா. வலியுறுத்தல்
கொரோனாவினால் மரணிப்பவர்களின் உடல்களை பலாத்காரமாக தகனம் செய்யும் கொள்கையினை இலங்கை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை வல்லுநர்கள் நேற்று திங்கட்கிழமை வலியுறுத்தியுள்ளனர்.
இவ்வாறு பலாத்காரமாக உடல்களை தகனம் செய்கின்றமையானது நாட்டின் முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் நம்பிக்கைகளுக்கு முரணானது எனவும், தற்போதுள்ள தப்பெண்ணங்கள் மற்றும் வன்முறை ஆகியவற்றைத் தூண்டக்கூடும் எனவும் கூறியுள்ளனர்.
கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதால், அந்தத் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என்பதற்கு மருத்துவ மற்றும் விஞ்ஞான ரீதியிலான ஆதாரங்கள் எவையும் இல்லை எனவும் வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
“கொவிட் பாதிப்பினால் மரணித்ததாக உறுதிப்படுத்தப்படும் அல்லது சந்தேகிக்கப்படும் உடல்களை தகனம் செய்வது மட்டுமே ஒரே வழி எனத் திணிப்பது – மனித உரிமை மீறலாகும். கொவிட் தொற்று காரணமாக இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதனால், கொவிட் போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது என்பதற்கு, இலங்கையிலோ அல்லது பிற நாடுகளிலோ மருத்துவ அல்லது விஞ்ஞான ரீதியிலான சான்றுகள் எவையும் இல்லை” என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளர்.