கொரோனா தடுப்பூசி விவகாரம்: உலகம் பேரழிவைச் சந்திக்கப் போகிறது: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

🕔 January 19, 2021

மமற்ற கொரோனா தடுப்பூசி வழங்கும் கொள்கைகளால், உலகம் தார்மீக ரீதியாக பெரிய தோல்வியை சந்திக்கவிருக்கிறது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருக்கிறது.

ஏழ்மையான நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட சந்தர்ப்பம் கூடியவர்களுக்கு தடுப்பூசி கிடைப்பதற்கு முன், பணக்கார நாடுகளில் நல்ல உடல் நலத்துடன் இருப்பவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தடுப்பூசி கிடைப்பது நியாயமல்ல என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசஸ் கூறினார்.

இதுவரை பணக்கார நாடுகளில் 3.9 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கிறது, ஆனால் ஒரு ஏழை நாட்டில் வெறும் 25 டோஸ் தடுப்பூசிதான் வழங்கப்பட்டிருக்கிறது.

கொரோனாவைக் கட்டுப்படுத்தும் விடயத்தில், உலக சுகாதார அமைப்பு மற்றும் சீனா மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

முன்னதாக, உலக சுகாதார அமைப்பால் ஒரு சுயாதீனக் குழு நியமிக்கப்பட்டது. ஐ.நா சபையின் பொது சுகாதார அமைப்பு, சர்வதேச அளவில் அவசர நிலையை முன் கூட்டியே அறிவித்திருக்கலாம் என அக்குழு கூறியது. அத்தோடு கொரோனா தொடர்பாக சீனா விரைவாக போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் கூறியுள்ளது.

இதுவரை இந்தியா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள் தங்களுக்கென தனியாக கொரோனா தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடித்துக் கொண்டன. மற்ற நாடுகள், ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை பயன்படுத்தி வருகின்றன.

இதில் பெரும்பாலான நாடுகள், தடுப்பூசியை தங்கள் சொந்த நாட்டு மக்களுக்கு விநியோகித்துக் கொள்வதற்கே முன்னுரிமை கொடுத்துக் கொண்டன.

உலக சுகாதார அமைப்பின் தலைவரின் கருத்து

“நான் வெளிப்படையாக பேச வேண்டும். உலகம் தார்மீக ரீதியில் பெரிய தோல்வியைச் சந்திக்கவிருக்கிறது. இந்த தார்மீக ரீதியிலான தோல்விக்கு, ஏழை நாடுகளிலுள்ள உயிர்களும் அவர்களின் வாழ்கையும்தான் விலையாகக் கொடுக்கப்படும்” என நேற்று திங்கட்கிழமை நடந்த உலக சுகாதார அமைப்பின் செயற்குழுக் கூட்டத்தில் டெட்ரோஸ் உலக சுகாதார அமைப்பின் தலைவர் பேசினார் தெரிவித்தார்.

“முதலில் எனக்குத்தான் தடுப்பூசி என்கிற அணுகுமுறை, நம்மை நாமே தோற்கடித்துக் கொள்ளும் விதத்தில் அமையும். இது தடுப்பூசியின் விலையை அதிகரிக்கும், பதுக்கலை ஊக்குவிக்கும். இது போன்ற செயல்களால் கொரோனா நீண்ட நாட்களுக்கு நம்மிடையே நீடிக்கும்” எனவும் அவர் கூறினார்.

எல்லா நாடுகளும் முழுமையாக கோவேக்ஸ் (உலக அளவில் கொரோனா தடுப்பூசியை பகிர்ந்து கொள்ளும் திட்டம்) திட்டத்தில் பங்கெடுக்க வேண்டும் என, உலக சுகாதார அமைப்பு – அழைப்பு விடுத்திருக்கிறது. இந்த திட்டம் அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறது.

வரும் 2021 ஏப்ரல் 7ஆம் திகதிக்குள் (உலக சுகாதார தினத்தன்று), உறுப்பு நாடுகள் அனைத்திலும், கொரோனா மற்றும் சமத்துவமின்மையை எதிர்கொண்டு வரும் வகையில், நம்பிக்கையின் அடையாளமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றார் டெட்ரோஸ்.

இதுவரை 180 நாடுகள் கோவேக்ஸ் திட்டத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன. இந்த திட்டத்துக்கு உலக சுகாதார அமைப்பும், சர்வதேச அளவில் கொரோனா தடுப்பூசியை ஆதரிக்கும் குழுக்களும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன. உலக நாடுகளை ஒன்றிணைக்க வேண்டும், அப்போதுதான் நாடுகள் சார்பாக, மருந்து நிறுவனங்களிடம் பேரம் பேசும் வலிமையை அதிகரிக்க முடியும் என்பதுதான் இதன் நோக்கம்.

இந்த திட்டத்தில் இருக்கும் 92 ஏழை மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கான கொரோனா தடுப்பூசிக்கான நிதி, நன்கொடையாளர்கள் மூலம் திரட்டப்படும்.

“ஐந்து மருந்து உற்பத்தியாளர்களிடமிருந்து 200 கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்தைப் பெற்றிருக்கிறோம். பெப்ரவரியில் இருந்து விநியோகத்தைத் தொடங்கவிருக்கிறோம்” எனவும் டெட்ரோஸ் கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்