விண்ணிலிருந்து விழும் பொருளை, ஆராயும் குழு தங்காலை விஜயம்
இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் நாளை வெள்ளிக்கிழமை விண்ணிலிருந்து விழும் என்று எதிர்வு கூறப்படும் பொருள் தொடர்பில் ஆராய்வதற்காக, குழுவொன்று தங்காலை சென்றுள்ளது.
WT 1190F எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மர்மப் பொருள் தொடர்பில் தங்காலை பிரதேசத்திலிருந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முற்பகல் 11.50 மணியளவில் இந்த பொருள் இலங்கையின் தெவிநுவர கடற் பகுதியிலிருந்து 65 கிலோமீற்றர் தொலைவில் விழும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது 40 ஆண்டுகளுக்கு முன்னர் விண்ணில் செலுத்தப்பட்ட அப்பலோ விண்கலத்தின் பாகம் அல்லது அதற்குப் பின்னர் விண்ணில் செலுத்தப்பட்ட லூனா விண்கலத்தின் பாகமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட விண்கலத்தின் பகுதியொன்று நாளை வெள்ளிக்கிழமை தெற்கு கடலில் உடைந்து விழும் என ஆர்தர் சி கிளார்க் மையம் ஏற்கனவே தெரிவித்திருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நாளைய தினம் குறிப்பிட்ட பிரதேசத்தில் விமான சேவையில் ஈடுபடவேண்டாம் என்றும், விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.