கொவிட்: ஃபைசர் தடுப்பு மருந்தினை அவசர காலத்துக்கு பயன்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி

🕔 January 1, 2021

கொவிட் 19 வைரசுக்கு எதிரான ஃபைசர் மற்றும் பயோ என் டெக் நிறுவனத்தின் தடுப்பு மருந்தினைஅவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்திக் கொள்ள உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி அளித்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொவிட் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதன்பின் உலகம் முழுவதும் பாதிப்புகள் பரவின. இவற்றில் அமெரிக்கா அதிக அளவில் பாதிப்புகளை சந்தித்து வருகிறது.

கொவிட் பாதிப்பு பெருந்தொற்று என கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் உலக சுகாதார ஸ்தாபனம் அறிவிப்பு வெளியிட்டது. பல்வேறு நாடுகளிலும் கொவிட் வைரசால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள சூழலில் அதற்கான தடுப்பு மருந்துகளை கண்டறியும் பணியும் நடந்தன.

இவற்றின் ஒரு பகுதியாக, ஃபைசர் மற்றும் பயோ என் டெக் உள்ளிட்ட பல நிறுவனங்கள் கொவிட் தடுப்பு மருந்துகளை கண்டறியும் பணியில் பலகட்ட பரிசோதனைகளில் வெற்றி பெற்றுள்ளோம் என கூறியுள்ளன.

இதையடுத்து அவற்றை தன்னார்வலர்களுக்கு பரிசோதனை செய்யும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. இதில் வெற்றி பெறும் நிலையில் வைத்தியர்கள், சுகாதார பணியாளர்கள், மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு முதற்கட்ட தடுப்பு மருந்துகளை வழங்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டு உள்ள செய்தியொன்றில், ஃபைசர் மற்றும் பயோன்டெக் நிறுவனத்தின் தடுப்பு மருந்தினைஅவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தி கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் இந்த முடிவால், ஃபைசர் மற்றும் பயோன்டெக் தடுப்பு மருந்து முதன்முறையாக அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியை பெற்றுள்ளன.

இதனால் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளும் உடனடியாக இவற்றுக்கு ஒப்புதல் வழங்கி, தடுப்பு மருந்துகளை தேவையான அளவுக்கு இறக்குமதி செய்து கொள்ள முடியும். நாட்டில் தேவையான பகுதிகளுக்கு அவற்றை வினியோகித்து கொள்ளவும் முடியும்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்