தனிமைப்படுத்தல் சட்டம் அமுலில் உள்ள கல்முனை நகரில், கடைகள் உடைக்கப்பட்டு திருட்டு

🕔 December 29, 2020

– பாறுக் ஷிஹான் –

னிமைப்படுத்தல் சட்டம்  அமுல்படுத்தப்பட்டுள்ள கல்முனை நகரில் உள்ள  மூன்று கடைகளில் நேற்றிரவு திங்கட்கிழமை திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இப்பகுதியில் உள்ள உள்ள 03 வர்த்தக நிலையங்களில் இவ்வாறு களவு இடம்பெற்றுள்ளன.

தொலைபேசி விற்பனை நிலையம், தலைக்கவசம் விற்பனை நிலையம் மற்றும் இரும்பு விற்பனை நிலையம் ஆகியவற்றின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டுள்ளதுடன்  பொருட்களும் திருடப்பட்டு எடுத்து செல்லப்பட்டுள்ளதாக கடைகளின் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

திருட்டு சம்பவம் இடம்பெற்ற கடைகளின் உரிமையாளர்களைச் சந்தித்த கல்முனை வர்த்தக சங்கத் தலைவர் கே.எம். சித்தீக் இது குறித்து தெரிவிக்கையில்;

“கொரோனா காலகட்டத்தில் இவ்வாறான திருட்டுக்கள் பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளமை கவலைக்குரியது. சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கல்முனை பிராந்திய ராணுவ முகாம் பொறுப்பதிகாரி ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன். அவர்கள் மேலதிக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடுகளை வழங்கி உள்ளனர். இவ்வாறு இருந்த போதிலும் எமது பொருளாதாரத்தை சீர்குலைப்பதற்கு எந்த சக்திக்கும் இடமளிக்க முடியாது” என்றார்.

இதேவேளை கல்முனை தெற்குப் பிரதேசத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதையடுத்து, கல்முனையின் சில பிரதேசங்கள் நேற்று (28) இரவு  முற்றாக முடக்கப்பட்டு, ராணுவத்தினரின் தீவிர கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளன.

கல்முனை செய்லான் வீதி தொடக்கம் வாடி வீட்டு வீதி வரையான 11 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையிலேயே குறித்த 03 கடைகளிலும் திருட்டுப் போயுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்