பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது, மாணவர்களை இரு பிரிவுகளாக அழைக்கத் தீர்மானம்: கல்வி அமைச்சர்
எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி அரச பாடசாலைகளின் ஆரம்ப பிரிவு வகுப்புகளை ஆரம்பிப்பதற்று அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், மாணவர்களை இரண்டு பிரிவுகளாக பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நடத்தியபோதே இதனைத்தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்; “மாணவர்கள் மத்தியில் தனிப்பட்ட இடைவெளியை முன்னெடுப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான வேலைத்திட்டம் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மாணவர்களின் நலன்கருதியே முறையான திட்டமிடலுக்கு அமைவாகவே, ஜனவரி மாதம் 11ஆம் திகதி பாடசாலைகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், இது உடனடியாக எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல என்றும் குறிப்பிட்டார்.
“விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளும் இதற்காக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. குறுகிய அரசியல் நோக்கில் இதுபற்றி கவனம் செலுத்தக்கூடாது. பாடசாலைகளை திறக்குமாறு பெற்றோர் நாளாந்தம் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்” அவர் தெரிவித்தார்.