மு.காங்கிரஸின் பதவிகளில் உள்ளோர் வெறும் ‘போடு காய்கள்’; தலைவரின் சகோதரர் அத்துமீறுகிறார்: முக்கிய செயற்பாட்டாளர் குற்றச்சாட்டு

🕔 September 19, 2020
மு.கா. தலைவருடன் இக்பால்

முஸ்லிம் காங்கிரஸின் அனைத்து விவகாரங்களிலும் அந்தக் கட்சியின் தலைவருடைய சகோதரர் ரஊப் ஹஸீர் என்பவர் தலையிடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

அந்தக் கட்சியின் குறிப்பிடத்தக்க செயற்பாட்டாளரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக உத்தியோகத்தருமான சாய்ந்தமருது முகம்மத் இக்பால் – இந்தக் குற்றச்சாட்டினை உள்ளடக்கிய ஆக்கம் ஒன்றினை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸின் பதவி நிலையில் உள்ளவர்கள் அனைவரும் போடுகாய்களாக பெயரளவில் உள்ளார்களே தவிர, எவருக்கும் எந்த அதிகாரமும் இல்லை என்று சிந்திக்க தோன்றுவதாகவும் அந்த ஆக்கத்தில் இக்பால் குறிப்பிட்டுள்ளார்.  

மேலும் அந்த ஆக்கத்தில்;

‘தலைவர் அஸ்ரப் அவர்களின் இருபதாவது நினைவு நிகழ்வு மூதூரில் 16ஆம் திகதி நடைபெற்றதாக கேள்வியுற்றோம்.

அதற்கு முன்னர் அந்நிகழ்வின் ஒழுங்கமைப்புக்காக சென்றுகொண்டிருக்கிறேன் என்று, ரஊப் ஹஸீர் தன்னுடைய முகநூலில் பதிவிட்டிருந்தமையைக் காணக்கிடைத்தது.

விடயத்துக்கு வருகிறேன். ஹஸீர் அவர்களே,

முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு பல கட்டமைப்புக்களும், அதில் பல பதவி நிலைகளும் உள்ளன.

குறிப்பாக கட்சியின் தேசிய நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துவதற்காக தேசிய அமைப்பாளர் அல்லது பிரதி தேசிய அமைப்பாளர் என்ற பதவிகளில் பிரமுகர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில், இவர்களின் பதவிகளை தாண்டி தாங்களே அத்தனை நிகழ்வுகளையும் தொடர்சியாக ஒழுங்கமைத்து வருகின்றீர்கள். இதற்கு காரணம் என்ன ?

தாங்கள் தலைவரின் சகோதரர் என்ற காரணத்தினால் கட்சியின் அத்தனை அதிகாரங்களையும் தங்களது கையில் எடுத்துள்ளீர்களா ? அவ்வாறென்றால் பெயரளவில் பதவிகள் எதற்கு ?

கட்சியின் ஒரு நிகழ்வு எந்த ஊரில் நடைபெறுகின்றதோ, அந்த ஊரைச்சேர்ந்த கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் அந்த மாவட்டத்தின் முக்கியஸ்தர்களின் ஒத்துழைப்புடன், தேசிய அமைப்பாளர் அல்லது பிரதி தேசிய அமைப்பாளரினால் நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்படல் வேண்டும். இதுதான் ஒழுங்குமுறையாகும்.  

ஆனால் எமது கட்சியில் அவ்வாறான ஒழுங்குமுறைகளும், சட்டதிட்டங்களும் பின்பற்றப்படுவதில்லை. மாறாக தடி எடுத்தவனெல்லாம் வேட்டைக்காரன் என்ற நிலை காணப்படுகின்றது.

இந்த செயல்பாடானது கட்சியின் பதவி நிலையில் உள்ளவர்கள் அனைவரும் போடுகாய்களாக பெயரளவில் உள்ளார்களே தவிர, எவருக்கும் எந்த அதிகாரமும் இல்லை என்று சிந்திக்க தோன்றுகின்றது.  

இவ்வாறான உண்மைகளை வெளியே கூறினால், தங்களது எதிர்கால அரசியல் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்று பலர் அச்சப்படுவதனை காணக்கூடியதாகவும் உள்ளது.

எனவே கட்சியின் தேசிய அமைப்பாளர் அல்லது பிரதி தேசிய அமைப்பாளர் பதவியை நீங்கள் பொறுப்பேற்பதன்மூலம் கட்சியின் ஒழுங்குமுறையை பேண முடியும் என்பது எனது நிலைப்பாடாகும்’ என, முகம்மத் இக்பால் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஹஸீரின் முகநூல் பதிவு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்