15 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்கள் சாதித்தது என்ன; மக்கள் சீர்தூக்கி பார்த்து, எம் பக்கம் வருகின்றனர்: அஷ்ரப் தாஹிர்

🕔 July 19, 2020

– ஏ.எல்.எம். சலீம் –

“எவரையும் தோற்கடிக்கும் நோக்கத்துடன் நான் தேர்தலில் களமிறங்கவில்லை. மக்கள் சேவை ஒன்றையே எனது நோக்காகக் கொண்டு தேர்தலில் களமிறங்கியுள்ளேன்” என்று திகாமடுல்ல மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பொதுத்தேர்தல் வேட்பாளர் அஷ்ரப் தாஹிர் தெரிவித்தார்.

நிந்தவூர் வன்னியார் வட்டாரத்திற்கான தமது தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து, அங்கு இடம் பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நிந்தவூர் பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்திரணி ஏ.எல். றியாஸ் ஆதம் தலைமையில் இந் நிகழ்வுகள் இடம் பெற்றன.

வேட்பாளர் அஷ்ரப் தாஹிர் தொடர்ந்து உரையாற்றுகையில்; 

“நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராக மூன்று முறை இருந்து உங்களுக்கு சேவையாற்றிவந்த நான் எனது சேவைகளைப் பரந்துபட மாவட்ட ரீதியாக முன்னெடுக்க வேண்டுமென்ற அவாவிலும், மக்களது கோரிக்கையின் பேரிலும் பொதுத்தேர்தலில் களமிறங்கியுள்ளேன்.

ஒரு சிலர் முன்னெடுக்கும் நீலிக் கண்ணீர் பிரச்சாரங்களின்படி ஊருக்கான நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதோ, அல்லது வெறும் பொம்மையாக அப்பதவியிலிருந்தோரை தோற்கடிப்பதோ எனது நோக்கமோ, இலக்கோ அல்ல.

அவ்வாறு எனக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்படும் பொய்களும் கட்டுக்கதைகளும் உள்ளத்தைக் கொதிக்க வைத்தாலும், உண்மையின் பக்கம் மக்கள் திரள்வது கண்டு ஆறுதல் பெறுகின்றேன்.

அரசியல் வங்குரோத்து காரணமாகப் பிதற்றித்திரியும் சிலர் நாடாளுமன்ற பிரதிநிதியாகவிருந்து 15 வருடங்கள் சாதித்தது என்ன வென்பதை இன்று மக்கள் சீர்தூக்கிப் பார்த்தே எம் பக்கம் அணிதிரண்டுள்ளனர்.

சமூகத்துக்காக என்றும் துணிச்சலுடன் குரல் கொடுத்தும், தன்னை அரப்பணித்தும், பல்வேறு அபிவிருத்திபணிகளை எம்மக்களுக்காக முன்னெடுத்துவம்வரும் சிறந்த தலைமைத்துவமான ரிசாட் பதியுதீனின் வழிகாட்டலில் எனது சேவைகளைத் தொடர்வேன்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி என்றும் முஸ்லிம் மக்களுக்கான குரலாகவும், பாதுகாப்பு அரணாகவும் திகழ்வதே எமக்கு மக்கள் பேராதரவு நல்கக் காரணமாகும்.

அன்று அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசல் பேரின மனநிலை கொண்ட இன வெறியர்களால் தாக்குதல்களுக்குள்ளான போது முதலில் நேரடியாக அம்பாறைக்கு வந்து அந்த அநீதிக்கு எதிராகக்கிளர்ந்து குரலெழுப்பியவர் முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிசாட் பதியுதீனே ஆவார்.

ஆனால் அப்போது முன்னாள் பிரதமர் ரணிலையும் அழைத்து வந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், அம்பாறை செல்லாது ஒலுவிலில் கூட்டம் நடத்திவிட்டுச் சென்றதை அம்பாறை முஸ்லிம் மக்கள் இன்னும் மறக்கவில்லை.

சமூகத்தின் குரலாகத் திகழாது தலையாட்டி பொம்மையாகத் திகழ்ந்த சுயநல அரசியல் நோக்கு கொண்ட முஸ்லிம் காங்கிரசினரையும், அதன் தலைமையையும் முஸ்லிம் மக்கள் இன்று நன்கு புரிந்து வைத்துள்ளனர்.

சமூகம் சார்ந்த, முஸ்லிம்களுக்கெதிரான அநீதிகளுக்கு எதிராக இவர்களால் குரல் கொடுக்க முடியாது.

வெறுமனே கொமிஷன், கொந்தராத்து, பக்கெட் நிரப்பும் நோக்குடன் அரசியல் செய்யும் இத்தகைய பேர் வழிகளை முஸ்லிம் மக்கள் தமது ஜனநாயக உரிமை மூலம் புறந்தள்ளவுள்ளுவார்கள் என்பது திண்ணமாகும்.

நான் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் இந்த மாவட்ட மக்களுக்காக எதையெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்வேன்.

முஸ்லிம் மக்களின் குரலாக, அர்ப்பணிப்படன் செயற்படவும் தயங்கேன்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்