கல்முனையில் தீ விபத்து: பல சரக்கு கடைகள் நாசம்
– ஏ.எல்.எம். ஷினாஸ், றாசிக் நபாயிஸ் –
கல்முனை அம்மன் கோயில் வீதியில் அமைந்துள்ள பல சரக்கு விற்பனை நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் இரண்டு கடைகளில் உள்ள பொருட்கள் அனைத்தும் முற்றாக எரிந்து நாசமாகின.
கடையின் பின் புறமாக வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடை உரிமையாளரின் மனைவி சிறிய காயங்களுடன் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் உரிய இடத்திற்கு வருகை தந்து உரிய நேரத்தில் செயற்பட்டமையினால் பக்கத்து வீடுகளுக்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.