கொவிட் 19 நோயால் மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்: அக்கரைப்பற்று மாநகர சபையில் தீரமானம்

🕔 May 14, 2020

– நூருள் ஹுதா உமர் –

கொவிட் 19 நோயால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் ஜனாஸாக்களை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் எனும் பிரேரணை, அக்கரைப்பற்று மாநகர சபையில் இன்று வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் அதாஉல்லா அகமட் சகி கொண்டு வந்த இந்தப் பிரேரணை – ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு மேற்படி தீர்மானம் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

கொவிற் -19 தொற்று காரணமாக மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்வதற்கான கோரிக்கை. எனும் தலைப்பிடப்பட்ட அந்தப் பிரேரணையில்;

‘முழு உலகையும் ஆட்கொண்டுள்ள கொவிற் -19 வைரஸ் எமது தாய்த்திருநாட்டையும் காவு கொண்டுள்ள இவ் இக்கட்டான நிலையில் நாட்டையும் , நாட்டு மக்களையும் காப்பதற்கு தங்களால் மேற்கொள்ளப்படும் அதிஉன்னத செயற்பாடுகளுக்கு எமது சபை சார்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இவ் உன்னத பணியில் தங்களுடன் இணைந்து செயற்படுகின்ற தங்களின் கீழ் இயங்கும் செயலணி, சுகாதாரத் துறையினர், பாதுகாப்புத் துறையினர் , பொலிஸார் போன்றோரின் சேவைகளைக் கௌரவிக்கின்றோம் .

உலகில் அபிவிருத்தி அடைந்த நாடுகளையே திண்டாட்டத்திற்குள்ளாக்கியுள்ள இந்த வைரஸ் தொற்றை வெற்றிகரமாக கையாளும் நாடுகளின் தரவரிசையிலும், அதன் தலைவர்களின் தரவரிசையிலும் முக்கிய இடத்தை எமது நாடும் அதன் தலைவரான நீங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளமையானது , எமது நாடும் எமது மக்களும் தங்களது தலைமையின் கீழ் பாதுகாக்கப்படுகின்றனர் என்ற நம்பிக்கையை எமக்குள் ஏற்படுத்தியுள்ளது.

இக்கொடிய தொற்றுக் காரணமாக உலக நாடுகள் அச்சமடைந்துள்ளதுடன், மக்கள் மன உளைச்சலுக்கும் உட்பட்டுள்ளனர். அதிலும் எமது நாட்டில் வாழும் முஸ்லிம்களாகிய நாங்கள் கடந்த 2020 ஏப்ரல் 11 ம் திகதி வெளியான 2170/8ம் இலக்க தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்புச் சட்டம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை அறிவித்தலுக்கமைய மிகுந்த மன வேதனையும் மன உளைச்சலையும் அடைந்துள்ளோம் .

எங்களது சமயத்தின் பிரகாரம் மரணித்த உடல்களுக்கு முக்கிய 04 கடமைகளை நிறைவேற்றுவது வலியுறுத்தப்பட்டுள்ளது. அவற்றுள் இறுதியானது அவ்வுடல்களை மண்ணில் புதைத்து நல்லடக்கம் செய்வதாகும். தீயிட்டு எரிவூட்டுவதற்கு எமது சமயத்தில் எந்த அனுமதியும் இல்லை.

ஆனால் குறித்த வர்த்தமானிப் பத்திரிகை அறிவித்தலில் 614 ( 1 ) ( அ) மற்றும் ( ஆ ) இன் பிரகாரம் முழுமையாக எரிவூட்டுவதற்கு ( 800 – 1200 °C இல் 45 தொடக்கம் 60 நிமிடம்) வலியுறுத்தப்பட்டுள்ளது .

அதற்கேற்ப கடந்த காலங்களில் இத்தொற்று காரணமாக மரணமடைந்த 04 இஸ்லாமிய சகோதரர்களின் ஜனாஸாக்கள் எரியூட்டப்பட்டுள்ளன. இது இலங்கை வாழ் முஸ்லிம்களாகிய எங்களுக்கும், முழு முஸ்லிம் சமூகத்திற்கும் மன வேதனையளிக்கின்றது .

இதேவேளை உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலில் கொரோனா தொற்று காரணமாக மரணமடையும் உடல்களை இறுதி அகற்றல் குறித்து குறிப்பிடுகையில் இது ஒரு அடிப்படை மனித உரிமையாகக் குறிப்பிடப்படுவதுடன், இதனை மேற்கொள்ளும் முறைகளில் 1.5 முதல் 3 மீற்றர் ஆழமான குழிகளில் அடக்கம் செய்வதற்கும் வழிகாட்டியுள்ளது.

இந்நடைமுறையினை அநேக உலக நாடுகள் பின்பற்றுகின்றமையை காணக்கூடியதாயுள்ளது. ஆனால் எமது நாட்டில் இவ்வாறு எரிவூட்டுவதானது குறித்த ஒரு சமூகத்தின் மத உரிமையை பெற்றுக் கொள்ளமுடியாது தவிர்ப்பதாக முஸ்லிம் சமூகம் கவலையடைகின்றது.

எனவே பல்லின சமூகம் வாழுகின்ற இந்நாட்டில் மத நல்லிணக்கம் , சமூக ஒருமைப்பாடு என்பனவற்றைக் கருத்திற் கொண்டும், இலங்கை வாழ் இஸ்லாமியர்களின் உணர்வுகளுக்கும் , சமய முறைப்படி இறுதிக் கிரியைகளை நடத்துவதற்கும் மதிப்பளித்து மேற்குறித்த 2170/8 ம் இலக்க வர்த்தமானப் பத்திரிகை அறிவித்தலை உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலுக்கு அமைவாக, கொவிற்-19 தொற்றினால் மரணமடையும் ஜனாஸாக்களை மண்ணில் நல்லடக்கம் செய்வதற்கு திருத்தம் செய்யும் கட்டளையை பிறப்பிக்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்