ரமழானில் பள்ளிவாசல்களைத் திறக்க வேண்டாம், கூட்டுத் தொழுகை நடத்த வேண்டாம்: வக்பு சபை அறிவிப்பு

🕔 April 20, 2020

திர்வரும் ரமழான் மாதத்தில் முஅத்தின்மார் அல்லாத எந்த பொதுமக்களுக்காகவும் பள்ளிவாசல்களைத் திறக்க வேண்டாம் என வக்பு சபை அறிவித்துள்ளது.

ரமழான் மாதத்தில் இலங்கை முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென குறிப்பிட்டு, சகல பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கும் இலங்கை வக்பு சபை அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது.

அந்த அறிவிப்பிலேயே மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதியன்று இலங்கை வக்பு சபையினால் வழங்கப்பட்ட பணிப்புரைகள் ரமழான் மாதம் முழுவதற்கும் அல்லது மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஜும்ஆ தொழுகை, ஐவேளை தொழுகை, தராவீஹ் தொழுகை உட்பட எதுவிதமான கூட்டுத் தொழுகைகளையும் நடத்த வேண்டாம் என்றும் அந்த சபை பணிப்புரை விடுத்துள்ளது.

இஃப்தார் நிகழ்ச்சி போன்ற எதுவித ஒன்றுகூடல்களையும் நடத்த வேண்டாம் என்றும் மஸ்ஜித்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிவாசலின் உள்ளோ அல்லது வளாகத்தின் உள்ளோ, கஞ்சி காய்ச்சவோ அல்லது கஞ்சி பகிர்ந்தளிக்கவோ வேண்டாம் என்றும் வக்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது.

பள்ளி ஜமாத் அங்கத்தவர்களுக்கும் இந்த பணிப்புரைகள் பற்றி முறைப்படி அறிவிக்குமாறும், கொவிட்-19 தொடர்பாக சுகாதார அமைச்சினாலும் பாதுகாப்புத் தரப்பினராலும் வழங்கப்படும் பணிப்புரைகளையும் வழிகாட்டல்களையும் பற்றி ஜமாத் அங்கத்தவர்களுக்கு தெளிவூட்டுவதோடு அவற்றைப் பின்பற்றியொழுகுமாறு மக்களை ஊக்கப்படுத்துமாறும் இலங்கை வக்பு சபை அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளை பணித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்