கொரோனா அச்சத்தில் உலகம்; ஏவுகணை சோதனையில் வடகொரியா: மிரட்டுகிறார் கிம் ஜாங் உன்
உலகமே கொரோனா வைரஸ் பற்றிய அச்சத்தில் இருக்கும் நேரத்தில், ஏவுகணை சோதனையில் வட கொரியா ஈட்டுப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.
இரண்டு ஏவுகணைகளைச் சோதனைகளில் வடகொரியா ஈபடுபட்டதாக தென் கொரியா ராணுவம் குற்றம் சாட்டுகிறது.
வட கொரியா இவ்வாண்டு செய்யும் முதல் ஏவுகணை சோதனை இதுவாகும்.
ஜப்பான் அருகிலுள்ள வட கொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இந்த ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
குறுகிய தூரம் சென்று தாக்கும் பாலிஸ்டிக் வகை ஏவுகணை இது என்கிறது தென் கொரியா ராணுவ தலைமை.
தென் கொரியாவும், அமெரிக்காவும் மேற்கொள்ளவிருந்த ராணுவ கூட்டுப்பயிற்சியைத் தள்ளி வைக்க அண்மையில் முடிவு செய்தது. இப்படியான சூழலில் வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென் கொரியாவின் இவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஈஸ்லே; “வட கொரியா தனது ராணுவ திறனைத் தொடர்ந்து வலிமைப்படுத்த விரும்புகிறது என்பதையே இது காட்டுகிறது” என்றார்.
“தென் கொரியாவும், அமெரிக்காவும் தங்களது ராணுவ கூட்டுப்பயிற்சியைத் தள்ளி வைத்தமையானது, கிம் ஜாங் உன் அரசாங்கத்திடம் எந்த நல்லெண்ணத்தையும் ஏற்படுத்தவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நொவம்பர் மாதமும் ஏவுகணை சோதனையொன்றில் வடகொரியா ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
கொரோனாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தென்கொரியாவில் 26 பேர் பலியாகி உள்ளனர்.
வட கொரியாவில் கொரோனாவின் பாதிப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை.