சர்வதேச தேயிலை தினம், மலையகத்தில் அனுஷ்டிப்பு: கௌரவிப்பும் இடம்பெற்றன

🕔 December 15, 2019

– க. கிஷாந்தன்

லையக மக்களின் வாழ்வியல் அம்சங்களுடன் 14 வது சர்வதேச தேயிலை தினம் பல்வேறு நபர்களின் பங்களிப்புடன் இன்று ஞாயிற்றுக்கிழமை ஹட்டனில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் போது மலையக மக்களின் வாழ்வினை பிரதிபலிக்கும் கலை, கலாசார மற்றும் விழுமியங்கள் உள்ளடங்கிய ஊர்வலம் ஒன்று ‘மலையக மக்கள் மாண்பினை உறுதிப்படுத்துவோம்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது.

இவ் ஊர்வலம் ஹட்டன் மல்லியப்பூ சந்தியில் ஆரம்பித்து, டி.கே.டப்ளியு கலாசார மண்டபம் வரை சென்றது.

இவ் ஊர்வலத்தில் பாரம்பரிய கலைகளான தப்பாட்டம், கும்மியாட்டம், காவடி, உள்ளிட்ட பல கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

ஊர்வலத்தில் சென்றவர்கள் ‘வீட்டு வேலைக்கு பிள்ளைகளா’?, ‘வீட்டுடன் விவசாய காணி கொடு’ போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளையும் காட்சிப்படுத்தியவாறு சென்றனர்.

அதனை தொடர்ந்து ஹட்டன் டி.கே.டப்ளியு மண்டபத்தில் மலையக மக்களை கௌரவிக்கும் நிகழ்வுகளும், கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள போராட்டத்தில் உயிர் நீத்த முல்லோயா கோவிந்தன், சிவனு லட்சுமணன் ஆகியோர் நினைவு கூறப்பட்டனர்.

‘மலையக மக்களின் மாண்பை உறுதிப்படுத்துவோம் அமைப்பு’ மற்றும் இலங்கை தேசிய கிறிஸ்தவ சங்கம ஆகியவை ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் மலையகத்தை சேர்ந்த பல்வேறு பிரிவினரும் கலந்து கொண்டிருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்