எனது வாகனத்தின் கதவைத் திறந்து, என்னை நோக்கி ஒருவர் வாளை ஓங்கினார்: கனமூலை பகுதி அடாவடி பற்றி, றிசாட் விவரிப்பு

🕔 November 26, 2019

சிறுபான்மை மக்களின் ஒன்றுபட்ட ஒத்துழைப்புடன் எதிர்வரும் பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாசாவை பிரதமராக்கும் முயற்சியில் ஈடுபடுவோமென அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக தேசிய முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மன்னாரில் பல கிராமங்களுக்கு சென்ற முன்னாள் அமைச்சர் அங்கு உரையாற்றிய போது இவ்வாறு கூறினார்.

ஆட்சியை தொடங்கிய குறுகிய காலத்தில் அராஜகம் தொடங்கியுள்ளது. புத்தளம் கனமூல மக்களை சந்திக்க சென்றபோது எமது வாகனத் தொடரணி மீது  நடத்திய தாக்குதல் இதனைப் புலப்படுத்துகின்றது.

டயர்போட்டு எரித்து எனது வாகனத்தை நிறுத்தினர். அதன் பின்னர் எனது கதவை  திறந்து வாளினால் என்னை நோக்கி ஓங்கினர். அப்போது  எனது பாதுகாப்பு பொலிஸ் அதிகாரி பாய்ந்து விழுந்து அவரைத் தள்ளினார். அதன் பின்னர் இன்னொருவர் வந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவவியை தாக்க முயன்றார்.

நான் ஒரு கட்சியின் தலைவன், மக்களின் பிரதிநிதி. எனது மக்களை சந்திக்க வீதியினால் செல்லமுடியாத நிலை உருவாகியுள்ளது. மக்களை சந்திக்க தடைபோடுகின்றனர். எனவே இந்த நிலை நீண்டகாலம் நீடிக்காது. எவரும் கவலைப்பட வேண்டியதில்லை.

இந்த குறுகிய காலத்தில் அமைச்சுப் பதவியை எடுத்துக்கொண்டு சிலர் வருவார்கள். இதற்காக ஏமாந்து விடவேண்டாம். எதிர்வரும் தேர்தலின் பின்னர் நாம் மீண்டும் பலமான சக்தியாக உருவெடுப்போம். நாம் ஒன்றுபடுவதன் மூலமே இதனை சாதிக்கமுடியும் என்றார்.

(அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்