மு.காங்கிரஸும், மக்கள் காங்கிரஸும் சில தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளன: இஸ்மாயில் எம்.பி

🕔 July 28, 2019

– பாறுக் ஷிஹான் –

முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற சிறுபான்மைக் கட்சிகள்  சில தீர்மானங்களை எடுக்க வேண்டிய தேவைப்பாடு இருப்பதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார்.

நமது சமூகம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றது. சுபீட்சமான முறையில்  நல்லிணக்கத்தோடு வாழக்கூடிய சூழ்நிலையை எதிர்காலத்தில் உருவாக்க  வேண்டும் எனவும் அவர் கூறினார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை 12 வட்டார வேட்பாளர் யு.எல் அப்துல் றஹ்மான் தலைமையில் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற புனரமைக்கப்பட்ட வீதிகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்;

“இன்று நமது சமூகம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றது. இதனால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமையும் அதன் உயர் பீடமும்  பல்வேறுபட்ட  அழுத்தங்களுக்களுக்கு உள்ளாகியுள்ளது.

இந்த காலகட்டத்தில் ஒரு தீர்க்கமான முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலையில் எங்களுடைய கட்சியும் கட்சியின் தலைமைத்துவமும் அதே போன்று உயர்பீட உறுப்பினர்களும் இருந்து கொண்டிருக்கின்றோம்.

எதிர்வரும் காலங்களில் நமது கட்சியின் தலைமைத்துவத்தை பலப்படுத்த வேண்டும். அந்த தலைமைத்துவம் இந்த நாட்டின் ஜனாதிபதியாக அல்லது இந்த நாட்டை ஆளக்கூடிய ஒரு சக்திவாய்ந்த தலைவரை அடையாளம் காட்டும். அதற்கு இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்கள் உள்ளன.

இன்று ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையின் காரணத்தினால் இலங்கையில் இருக்கின்ற சிறுபான்மைக் கட்சிகள் குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகள்  சில தீர்மானங்களை எடுக்க வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றன.

எதிர்காலத்தில் சுபீட்சமான முறையில்  நல்லிணக்கத்தோடு வாழக்கூடிய சுழ்நிலையை ஏற்படுத்த  வேண்டும். எங்களுக்குள்ளே பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொண்டு முரண்பட்டுக் கொண்டிருக்காமல் எங்களுக்குள்ளே ஒற்றுமையான வாழ்க்கையை மேற்கொள்ள வழிவகையை தேடவேண்டும்.

கல்முனை பிரச்சினை கூட தற்போது  பூதாகரமாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்காக வேண்டி நாடாளுமன்றத்தில் கட்சி பேதமின்றி இருக்கின்ற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பல்வேறுபட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம்” என்றார் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்பு செயலாளர் கே.எம். ஜவாத், கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம். அப்துல் மனாப்,  முன்னாள் மாநகர சபை உறுப்பினர் வை.கே. றஹ்மான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன்போது  சுமார் 35 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டு புனரமைக்கப்பட்ட மாதவன் வீதி,  மாரியா வீதி,  சின்னத்தம்பி  வீதிகள் இணைக்கும் பகுதிகள் மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்