நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள்; 126 எம்.பி.களின் கையொப்பங்களுடன் சபாநாயகருக்கு கடிதம்: ரணில் தெரிவிப்பு
நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு கோரி, 126 உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் சபாநாயகருக்கு கடிதம் ஒன்றினைக் அளித்துள்ளதாக, ரணில் விக்ரமசிங்க தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியினை அரசியலமைப்புக்கு இணங்க தீர்த்து வைக்கும் பொருட்டு, நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கடிதத்தின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.
“இலங்கையின் பிரதமர் எனும் வகையில், நாட்டின் சமாதானத்தையும், ஸ்திரத்தன்மையினையும் மீட்டெடுப்பதற்காகவும், நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், அனைத்து கட்சிகளையும் நாடாளுமன்றத்தில் ஒன்று கூடுமாறு நான் அழைக்கிறேன்” என ரணில் விக்ரமசிங்க, தனது பேஸ்புக் பதிவின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் சபாநாயகர், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள தனக்குரிய உரிமைகளைப் பயன்படுத்துவார் என்றும், அடுத்த இரண்டு நாட்களுக்குள் அவர் நாடாளுமன்றத்தைக் கூட்டுவார் எனவும் தான் எதிர்பார்ப்பதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருக்கிறார்.