மேன்முறையீடு செய்வதற்கு அனுமதி கோரும் ஞானசார தேரரின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

🕔 August 29, 2018

னக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனைக்கு எதிராக, பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் மேன்முறையீடு செய்வதற்கு அனுமதி கோரிய மனுவை எதிர்வரும் 31ம் திகதி ஆராய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன மற்றும் நீதிபதி ஒபேசேகர ஆகியயோர் முன்னிலையில் மேற்படி மனு இன்று புதன்கிழமை எடுக்கப்பட்டது.

இதன்போது ஞானசார தேரர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி, குறித்த வழக்குத் தீர்ப்பு சம்பந்தமாக எழுந்துள்ள சட்ட சிக்கல்கள் மூன்றை முன்வைக்க வேண்டும் என்றும், எனினும் அவற்றை எழுத்து மூலம் தயார் செய்ய முடியவில்லை எனவும் கூறியதோடு, இன்றைய தினம் அதனை முன்வைக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம் வழக்கை எதிர்வரும் 31ம் திகதி ஒத்தி வைத்தது.

நீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 06 வருடங்களில் அனுபவிக்கக் கூடிய 19 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 2016ம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு, ஹோமாகம நீதவான் நீதிமன்றில் விசாரிக்கப்படும் போது, நீதிமன்றத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அப்போது ஹோமாகம நீதவானாகவிருந்த ரங்க திஸாநாயக, இது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையிட்டமையினை அடுத்து, ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு விசாரணை இடம்பெற்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்