பகிடிவதைக்கு 10 வருடம் சிறைத்தண்டனை: சட்டத்தில் இடமுள்ளது என்கிறார், உயர் கல்வி அமைச்சர்
பல்கலைக்கழகங்களில் பகிடி வதைகளில் ஈடுபட்டவர்களுக்கு 10 வருட கால சிறைத்தண்டனை விதிப்பதற்கு, சட்டத்தில் இடமிருப்பதாக உயர்கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அண்மையில் ருகுணு பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 05 மாணவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இலங்கையில், கடந்த வருடத்தில் பகிடிவதை தொடர்பில் உயர்கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழகங்களில் 300 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டதாக உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ள நிலையிலேயே, அமைச்சர் மேற்படி விடயங்கக் கூறியிருக்கின்றார்.
மேலும், பகிடிவதை தொடர்பில் சிரேஷ்ட மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும் உயர்கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைக்கு எதிராக, உரியமுறையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இதன்போது அமைச்சர் உறுதியளித்துள்ளார்.