அம்பாறை பள்ளிவாசல் மீது தாக்குதல்; முஸ்லிம்களின் வாகனங்களுக்கும் தீ வைப்பு: காடையர்கள் அட்டகாசம்

🕔 February 27, 2018

– மப்றூக், படங்கள்: ஏ.எல். நிப்றாஸ் –

ம்பாறை ஜும்ஆ பள்ளிவாசல் மீது நேற்று திங்கட்கிழமை இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பள்ளிவாசல் கடுமையாக சேதமடைந்துள்ளதாகத் தெரியவருகிறது.

இதேவேளை, அம்பாறையில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்களும் தாக்கப்பட்டுள்ளதோடு, வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஹோட்டல் ஒன்றில் கொத்து ரொட்டி கொள்வனவு செய்ய வந்த சிங்களவர்கள் சிலருக்கும், ஹோட்டலில் கடமையாற்றுவோருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையினை அடுத்தே, மேற்படி சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

ஹோட்டலில் கொத்து ரொட்டி கொள்வனவு செய்தவர்கள், அதனுள் கருத்தடை மாத்திரை கலக்கப்பட்டுள்ளதாக புரளி கிளப்பி விட்டு, ஹோட்டலில் பணியாற்றுபவர்களுடன் பிரச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து அந்த இடத்துக்கு பஸ் மற்றும் வாகனங்களில் மேலதிக ஆட்கள் வரவழைக்கப்பட்டு, ஹோட்டல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்த குழுவினர் அங்கிருந்து பள்ளிவாசல் அமைந்துள்ள இடத்துக்குச் சென்று, பள்ளிவாசலை தாக்கி உடைத்துள்ளனர். இதனால், பள்ளிவாசலுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் அந்தப் பகுதியில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்களும் தாக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, முஸ்லிம்களுக்குச் சொந்தமான வேன் ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. மேலும் 03 மோட்டார் சைக்கிள்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்