பஸ், வாகனங்களில் ஆட்கள் வந்திறங்கினர்; அம்பாறை சம்பவம், திட்டமிட்ட நாசகாரச் செயல்
– அஹமட் –
அம்பாறையில் நடைபெற்ற இனவாதத் தாக்குதலானது மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு வன்செயல் என, அங்கிருக்கும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.
நேற்றிரவு முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான காசிம் ஹோட்டலில், கொத்து ரொட்டி கொள்வனவு செய்த சிங்களவர்கள் சிலர், வேண்டுமென்றே பிரச்சினையினை ஏற்படுத்தியதாகவும் அந்த ஊடகவியலாளர் கூறினார்.
ஹோட்டலில் பணியாற்றுபவர்களுடன் பிரச்சினையினை ஏற்படுத்தியவர்கள், தொலைபேசி மூலமாக தமது சகாக்களுடன் பேசியமையினை அடுத்து, பஸ் மற்றும் வாகனங்களில் பெருமளவானவர்கள் வந்திறங்கியமையை வைத்தே, அதுவொரு திட்டமிடப்பட்ட நாசகாரச் செயல் என்பதை விளங்கிக் கொள்ள முடியும் எனவும், அங்கிருக்கும் சிரேஷ்ட ஊடகவியலாளர் தெரிவித்தார்.
பிரச்சினையொன்றினை தொடங்க வேண்டும் என்பதற்காகவே, முஸ்லிம் ஹோட்டலொன்றுக்கு அவர்கள் வந்து கொத்து ரொட்டியினை கொள்வனவு செய்ததாகவும், அந்தக் கொத்து ரொட்டியில் கருத்தடை மாத்திரை இடப்பட்டுள்ளதாக வீண் புரளியினைக் கிளப்பி விட்டதாகவும் நமது ஊடகவியலாளர் மேலும் குறிப்பிட்டார்.