பிரதமரின் திட்டத்தை இடைநிறுத்தினார் ஜனாதிபதி; ஐ.தே.க.வினரும் அமைச்சரவையில் ஆதரவு
உயர்தர மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் டெப் (Tab) வழங்கும் பிரமரின் திட்டத்தினை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தியுள்ளார்.
அமைச்சரவைக் கூட்டம் இன்று செவ்வாய்கிழமை ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற போது, 04 பில்லியன் ரூபாய் செலவில் இந்தத் திட்டத்தை அமுல் செய்வதை விடவும், அந்த நிதியில் நாட்டுக்குத் தேவையான இன்னுமொரு உற்பத்தி திட்டமொன்றினை நடைமுறைப்படுத்தலாம் என ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
மேற்படி திட்டத்துக்கு இணங்க 27 ஆயிரம் ரூபாய் பெறுமதியான டெப் (Tab)களை, 159,078 மாணவர்களுக்கும் 36,070 ஆசியர்களுக்கும் வழங்குவதற்காக, விநியோகஸ்தரையும் ஏற்கனவே அமைச்சரவை தெரிவு செய்திருந்தது.
இதேவேளை, பிரதமரின் மேற்படி திட்டத்துக்கு கடந்த வாரம் அனுமதியளித்திருந்த அமைச்சர்கள், இன்றைய தினம், அந்த திட்டத்தை இடைநிறுத்துவதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானத்துக்கும் ஒப்புதல் வழங்கியுள்ளனர்.
பி.பி.சி. சிங்கள சேவைக்கு அமைச்சரொருவர் இந்த விவகாரம் குறித்து தெரிவிக்கையில்; “டெப், வை – பை வழங்கும் திட்டங்கள், மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கானதல்ல என்பதை, கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் பொதுமக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். எனவே, அந்த திட்டத்தை இடைநிறுத்துவதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை, ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மை அமைச்சர்களும் ஆதரித்துள்ளனர்” என்றார்.