கடும் காற்று வீசும், கடல் கொந்தளிக்கும்; இன்றும் நாளையும் எச்சரிக்கையாக இருக்கவும்
வங்காள விரிகுடாவில் ஏற்படும் தாழமுக்கத்தினால் உருவாகும் கடுங்காற்று இலங்கையின் கரையோர பிரதேசங்களில் இன்று புதன்கிழமையும், நாளையும் வீசும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதனால் ஆழ்கடலில் மீன் பிடிக்க செல் வோர், சுழியோடிகள் மற்றும் கடல் பயணங்களை மேற்கொள்வோர் எவரும் எதிர்வரும் எட்டாம் திகதி வரையில் கடலுக்கு செல்ல வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ நிலைய பணிப்பாளர் நாயகம் பிரேமலால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையை சுற்றி வீசும் கடுங்காற்றினால் எதிர்வரும் நாட்களில் ஏற்படப் போகும் அசாதாரண நிலைமைகளை எதிர்கொள்ள. அவசரகால அவதான நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று செவ்வாய்கிழமை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பாக, அவர் மேலும் தெரிவிக்கையில்;
“வட அந்தமானில் ஏற்பட்டுள்ள குறைந்த வலுவான தாழமுக்கத்தினால் ஏற்பட்ட கடும் காற்று, காங்கேசன் துறை, திருகோணமலை, பொத்துவில், காலி, ஹம்பாந்தோட்டை பகுதிகளில் இன்று வீசக் கூடும். எனவே அந்த பிரதேசங்களை சேர்ந்த கரையோர வாழ் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றார்கள்.
இலங்கை கடற்பரப்பில் காற்றின் வேகம் இன்று 100க்கு 50 வீதம் அதிகமாக இருப்பதோடு, வடகிழக்கில் நாளை இதன் வேகம் இன்னும் அதிகளவாக காணப்படும்.
இந்த காற்றின் வேகம் எட்டாம் திகதியளவிலேயே குறைவடையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்த காற்றின் வேகம் 70 கிலோ மீற்றருக்கு அதிகமாக இலங்கையை கடந்து செல்லும். இவ்வேளையில் கடல் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படும்.
இதனால் கடற்கரையருகில் உள்ள மீனவர்கள் – தொழில் உபகரணங்களை பாதுகாத்துக் கொள்வதோடு கடலுக்குள் பயணிப்பதை முற்றாக தவிர்த்துக் கொள்ள வும் அறிவுறுத்தப் படுகின்றார்கள்” என்றார்.