அமைச்சர் அர்ஜுனவுக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டவர்களுக்கு எதிராக, முறைப்பாடு செய்ய வேண்டும்: நாமல்
அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டவர்களுக்கு எதிராக, அவர் முறைப்பாடு செய்யவேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிர்மாணித்த ஹம்பாந்தோட்டை – தங்கல்லையிலுள்ள அங்குலுகொலபெலஸ்ச சிறைச்சாலை வளாகத்தை பார்வையிடச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர், அங்கு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, இதைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
“தனக்கு சிலர் லஞ்சம் கொடுக்க முற்பட்டதாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் அர்ஜுன ரணதுங்க வெளிப்படையாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த அரசாங்கத்தில் உள்ளவர்கள் தங்கள் இயலாமையை மறைத்துகொள்ள, அமைச்சர்களுக்கு லஞ்சம் கொடுத்தாவது பாவனைக்கு பொருத்தமில்லாத எரிபொருளை நாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றனர்.
மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் திருடர்கள் இருப்பதாக கூறினார்கள். இன்று இவர்களின் அரசாங்கத்தில் திருடர்கள் உள்ளதாக அமைச்சரவை அமைச்சர்களே கூறுகின்றனர்.
அர்ஜுன ரணதுங்கவை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கவே இந்தசூழ்ச்சி இடம்பெறுவதாக நேற்று விஜேதாச ராஜபக்ஷ கூறியுள்ளார். அவருடைய கூற்றில் சிலவேளை உண்மையிருக்கலாம்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு வெளியிட்டதால் அர்ஜுன ரணதுங்க, துறைமுகங்கள் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
அர்ஜுன நீக்கப்பட்டமை பிழை என கூறியமைக்காக, விஜேதாச ராஜபக்ஷ அவருடைய அமைச்சில் இருந்து நீக்கப்பட்டார்.
அமைச்சரவையில் இருந்து வெளியேறாத அனைவரும் இவர்களது ஊழல்களுக்கு துனைபோவதாகவே எமக்கு எண்ணத் தோன்றுகிறது.
தனக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டவர்களுக்கு எதிராக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க முறைப்பாடு செய்யவேண்டும். அல்லது அவர் கூறிய விடயங்களை வைத்து பொலிஸார் இதனை விசாரணை செய்யவேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.