புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருபவர்கள், இலங்கையின் கலாசாரங்களையோ, மதங்களையோ பின்பற்றுபவர்களல்லர்: நாமல் ராஜபக்ஷ
ராஜபக்ஷ குடும்பத்தை சிறையில் அடைத்தாவது, அரசியலமைப்பில் மாற்றத்தை கொண்டு வந்து, நாட்டை அழிவின் விளிம்புக்கு கொண்டு செல்வதற்கு சிலர் முயற்சிப்பாதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்;
“இலங்கை கலாசாரத்தை மதித்து நடக்காத வெளிநாட்டு சக்திகளுக்கி பின்னால் உள்ள சிலர்தான், புதிய அரசியலமைப்பை கொண்டு வந்து – நாட்டை அழிவுக்கு கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ – இன நல்லுறவை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தார். கைது செய்யப்பட்ட 12,000 விடுதலைப் புலிகளுக்கு புனர் வாழ்வளித்தார். இந்த எண்ணிக்கை சாதாரணமான எண்ணிக்கையல்ல. இதிலிருந்தே அவர் இன நல்லுறவை மேம்படுத்த எந்தளவு அக்கறையுடன் செயற்பட்டுள்ளார் என்பதை, இன்று இன நல்லுறவை பற்றி பேசுபவர்கள் அறிந்துகொள்ளலாம்.
இந்த அரசாங்கமானது இன நல்லுறவை மேம்படுத்தப்போகிறோம் என கூறிக்கொண்டு இலங்கை நாட்டை அணுவணுவாக சிதைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இன நல்லுறவை கட்டியெழுப்ப எத்தனையோ விடயங்கள் உள்ள போது, எடுத்த எடுப்பில் அரசியலமைப்பில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டுமா?
இன நல்லுறவை மேம்படுத்த இவ்வரசாங்கம் வேறு என்ன செய்துள்ளது. இவர்களுக்கு தாய் நாட்டின் மீது சிறிதளவும் அக்கறை இல்லை. இல்லாவிட்டால் இலங்கை நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு தாரை வார்ப்பார்களா?
இலங்கை நாட்டின் அரசியலமைப்பை கொண்டுவருபவர்கள், இலங்கை நாட்டின் கலாசாரத்தையோ அல்லது இங்குள்ள மதங்களையோ பின்பற்றுபவர்களல்லர். இவர்களுக்கு இலங்கை நாட்டின் மீது பற்று இருக்காது. இவர்களின் சில்லறை விளையாட்டை நாம் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். மிகக் கடுமையான போராட்டங்களை முன்னெடுக்கவும் தயாராகவுள்ளோம். இது அவர்களுக்கும் தெரியும்.
இவ்வரசாங்கம், முழு ராஜபகஷ குடும்பத்தினரையும் சிறையில் அடைத்தாவது தங்களது விடயங்களை சாதிக்கும் நிலையில் உள்ளது. எங்களை கைது செய்தாலும் எங்களது உறவுகளான இலங்கை மக்கள் இவ்வரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பார்கள்” என்றார்.
(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)